மதுபானக்கடைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சிறுத்தை - 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

Jul 22, 2026 - 13:01
0
மதுபானக்கடைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சிறுத்தை - 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்திருந்த மதுபானக்கடைக்குள் திடீரென சிறுத்தைப்புலி ஒன்று உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறி மதுபானக் கடைக்குள் புகுந்த சிறுத்தைபுலி தோடரைசிங் என்ற இடத்தில் உள்ள மதுபானக்கடைக்குள் திடீரென நுழைந்தது.

அச்சிறுத்தைபுலி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். அந்த சிறுத்தைபுலி மிகவும் பிஸியான சந்தைக்கு வழியாக மதுபானக் கடைக்குள் புகுந்தது. ஆரம்பத்தில் சிறுத்தைப்புலி நகருக்கு அருகில் உள்ள புதர்களில் பதுங்கியிருந்ததை பொதுமக்கள் முதலில் கண்டறிந்தனர்.

இதையடுத்து உள்ளூர்வாசிகள் எச்சரித்ததையடுத்து வன தன்னார்வலர் ராகேஷ் மாலி அப்பகுதியை ஆய்வு செய்ய சென்றார். ஆனால் சிறுத்தை புலி திடீரென அவர் மீது பாய்ந்தது. இதில் அவரது கால்களில் காயம் ஏற்பட்டது.

பின்னர் சிறுத்தை புலி சந்தைக்குள் கிட்டத்தட்ட 400 மீட்டர் ஓடியது. மார்க்கெட்டில் இருந்த மதுக்கடைக்கு வெளியில் அமர்ந்திருந்த பதே லால் கோலி என்பவரை முதலில் அது தாக்கியது. அதன் பிறகு 25 வயது மது விற்பனையாளர் சஞ்சய் குர்ஜார் என்பவரை தாக்கியது.

இதில் அவரின் மூக்கு, முதுகு மற்றும் உடலின் பிற பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதால் கடையை விட்டு வெளியே ஓடி தப்பினார். சிறுத்தைபுலி மதுபானக்கடைக்குள் புகுந்தது. உடனே மக்கள் கடையின் கதவை மூடினர். வனத்துறைக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தைபுலியின் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்ததும், டோங்கில் இருந்து வன அதிகாரிகள் மற்றும் ஜெய்ப்பூர் மிருகக்காட்சிசாலையில் இருந்து சிறப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சுமார் ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு, சிறுத்தை பாதுகாப்பாக மயக்க மருந்து அளித்து மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டோங்க் வனப் பிரிவு அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிறுத்தைபுலியை பிடிக்கும் குழுவிற்கு தலைமை தாங்கிய மூத்த கால்நடை மருத்துவர் அசோக் தன்வார் இது குறித்து கூறுகையில், ``பிடிபட்டது ஒரு ஆண் சிறுத்தை. நான் இதுவரை 60க்கும் மேற்பட்ட வனவிலங்கு மீட்புப் பணிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால் மதுக்கடைக்குள் இருந்து சிறுத்தையை மீட்டது இதுவே முதல்முறை'' என விவரித்தார். மதுபான கடைக்குள் புகுந்த சிறுத்தையை பிடிப்பதை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்தில் கூடினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User