தொடரும் தொழிலதிபர்களின் வங்கி மோசடிகள், முடிவுக்கு வராத வழக்குகள்... இதற்கு இல்லையா ஒரு ‘END’?

Apr 10, 2026 - 06:31
 0
தொடரும் தொழிலதிபர்களின் வங்கி மோசடிகள், முடிவுக்கு வராத வழக்குகள்... இதற்கு இல்லையா ஒரு ‘END’?

கார்ப்பரேட்டுகளுக்கும், பல தொழிலதிபர்களுக்கும் கொடுத்த ரூ.9.75 லட்சம் கோடி கடனை வங்கிகள் சமீபத்தில் ‘ரைட் ஆஃப்’ செய்தது அதிர்ச்சியளித்தது. தற்போது, ‘அனில் அம்பானி வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த தொகை ரூ.73,000 கோடி’ என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இத்தொகையை மீட்க முடியாமல் வங்கிகளும் அரசு விசாரணை அமைப்புகளும் பல ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கின்றன.

2016 - 2019 வரை பல வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாமல் திவாலாகி அம்பலமானார், அனில் அம்பானி. ‘ஏழு ஆண்டு களாகியும், அவர் மீதான வங்கி மோசடி வழக்கு விசாரணைகளில் ஏன் முன்னேற்றம் இல்லை?’ என்று, தற்போது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அவரது ரூ.2,983 கோடி மதிப்பிலான கடனை வெறும் ரூ.26 கோடியில் செட்டில் செய்து முடித்திருக்கும் திவால் சட்ட அமைப்பு, சுமார் 99% கடனை காற்றில் விட்டுவிட்டது. இதனால் வங்கிக் கடன்களை மீட்கும் ஐபிசி (IBC - Insolvency & Bankruptcy Code) போன்ற அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மை சிதைந்துள்ளது.

2016-ல் கொண்டுவரப்பட்ட திவால் (IBC) சட்டம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்யும் தொழிலதிபர்களுக்குப் பாடம் புகட்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், இச்சட்டமே அவர்களை சட்டப்படி காப்பாற்றும்/விடுவிக்கும் என எதிர்பார்க்கவில்லை. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை மிகக் குறைந்த விலைக்குப் புதியவர்களுக்கு மாற்றம் செய்யும் வேலையைத்தான் இது செய்கிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது.

‘‘கடன் கொடுத்த வங்கிகளும், பொதுமக்களின் வரிப்பணமும்தான் இதனால் பாதிப்புக்குள்ளாகின்றன. இது அரசு அமைப்புகளின் ‘கூட்டுச் சதி’ போன்று தோன்றுகிறது’’ என்று தற்போது உச்ச நீதிமன்றமே குட்டியுள்ளது.

அனில் அம்பானி விவகாரத்தில் மூன்று கசப்பான உண்மைகள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாவது, திவால் சட்டம் தவறான வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது, கடன் மோசடிகளால் பெரிய இழப்புகளைச் சந்திப்பவை பொதுத்துறை வங்கிகள்தான். அதாவது, நேரடியாக மக்களின் பணம்தான் பறிபோயிருக்கிறது. மூன்றாவது, இந்த மோசடிகளில் யாருக்கும் பொறுப்பு இல்லை என்ற சூழலை அரசின் சட்ட அமைப்பே உருவாக்கியுள்ளது.

அனில் அம்பானியை மட்டுமல்ல, வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி என நீளும் பட்டியலில் உள்ள யாரையும் அரசும், அதன் அமைப்புகளும் நீதியின் முன் நிறுத்தப்போவதில்லை.

இது அனில் அம்பானி தொடர்பான விவகாரம் மட்டுல்ல. இந்திய நிதித் துறை, பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றின் ஒட்டுமொத்தப் பிரச்னை. உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதுபோல, இதில் விசாரணை நியாயமாகவும், வெளிப்படையாகவும், காலக்கெடுவுடனும் நடைபெற வேண்டும் என்பதே ஒரே தீர்வு. நடக்குமா?

- ஆசிரியர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0