"மாணவர்கள் அனைவரும் சமம்!" - பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செங்கோட்டையன் விளக்கம்

Jun 27, 2026 - 15:32
0
"மாணவர்கள் அனைவரும் சமம்!" - பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (ஜூன் 26, 2026) ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், "பள்ளி மாணவர்களுக்கு சாதி பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இது தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.

அதையொட்டி இன்று செங்கோட்டையன் ஈரோட்டில் விளக்கமளித்துள்ளார்...

"வருவாய்த் துறையும் கல்வித்துறையும் இணைந்து மாணவர்களுக்கு முகவரி, ரத்த வகை, ஆதார் அட்டை மற்றும் கல்வித்தகுதி போன்ற விவரங்களை உள்ளடக்கிய தரவுகளை வழங்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளாக, வருவாய்த் துறை அதிகாரிகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று சாதிச் சான்றிதழ்களை வழங்கி வருகின்றனர்.

இதற்கு முன்பு மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று சான்றிதழ்களைப் பெற வேண்டியிருந்த நிலையில், இப்போது பள்ளிகளிலேயே அந்தப் பணிகள் வருவாய்த் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, பள்ளி கல்வித்துறையும் வருவாய்த் துறையும் இணைந்து இந்த விவரங்களை க்யூ.ஆர் கோடு மூலமாக வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இரு துறைகளும் இது குறித்துப் பேசிய பிறகு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் பள்ளிகளிலேயே வழங்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, அது இனியும் தொடரும்.

அதே நேரத்தில், தற்போது வழங்கப்படவுள்ள புதிய தரவுகளில் சாதி குறித்த விவரங்கள் இடம் பெறாது.

ஏனெனில் பள்ளிகளில் மாணவர்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

மாணவர்களின் நலன் கருதி, விபத்துகள் போன்ற அவசர காலங்களில் அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், வெளியூர் செல்லும் போது மற்றவர்களைத் தொடர்பு கொள்ளவும் இந்த முகவரி மற்றும் ஆதார் தரவுகள் பேருதவியாக இருக்கும்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

பத்திரிகைகளில் வந்த சில செய்திகளைப் போல, இந்தத் தரவுகளில் சாதிச் சான்றிதழ்கள் இணைக்கப்படாது என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.

மாணவர்கள் அனைவரும் சமம், எல்லா மதமும் ஒன்று என்ற அடிப்படையில்தான் கல்வித்துறை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, ரத்த வகை மற்றும் ஆதார் அட்டை போன்ற தரவுகள் மட்டுமே இருக்கும். இந்தத் திட்டத்தை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படிச் செயல்படுத்தலாம் என்பது குறித்து பள்ளி கல்வித்துறையும் வருவாய்த் துறையும் இணைந்து ஆய்வு செய்ய உள்ளன.

பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்பதால், அத்தகைய விவரங்களை இந்தத் தரவுகளில் கொண்டு வரும் வழக்கம் எப்போதும் இல்லை.

பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் போது, இந்தத் தரவுகளும் சேர்த்து வழங்கப்படும் என்றுதான் கூறப்பட்டதே தவிர, சாதி விவரங்கள் அதில் இணைக்கப்படாது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்".

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User