`தினம் 300 ரூபாய் சேர்ந்தா போதும்; நானும், மனைவியும் சந்தோஷமா இருப்போம்!' - 2 ரூபா `வடை' தாத்தா
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்டேட் ஃபாங்கு செல்லும் வழியில் பாம்ஸ் ஹோட்டல் எதிர்ப்புறம் துரை(77) என்ற முதியவர் ஒருவர் பல ஆண்டு காலமாக வடை விற்பனை செய்து வருகிறார்.
மயிலாடுதுறை மக்கள் இவரை அனபோடு, "வடை தாத்தா" என அழைக்கும் அளவில் மாயூரம் மக்களின் உள்ளங்களையும் தன்வசப் படுத்தியுள்ளார்.
தள்ளாடும் வயதென்றாலும் அவரின் தள்ளுவண்டி வியாபாரம் பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உழைப்பதற்கு வயதொன்றும் தடையில்லை, எந்த வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணைத்தை விதைத்துவிடும்.
அப்படிப்பட்ட முதுமையிலும் இளமையாய் உழைக்கும் உழைப்பாளியை சந்திக்க ஒரு மதிய வேளையிலேயே சென்ற போது, இளைமை நிறைந்த துடிப்புடன் வடையை தட்டிக்கொண்டிருந்தார். நம்மை பார்த்த அவரோ, நமக்கும் சாப்பிட நான்கு எடுத்தப்படியே நம்மிடையே பேசத்தொடங்கினார்.

``என்னோட சொந்த ஊரு அறந்தாங்கிபுரம். நான் எட்டாவது படிக்கும்போது, என்னோட தலைமையாசிரியர் கிட்ட சண்டை போட்டுட்டு, வீட்டுக்கு போன திட்டுவாங்கன்னு, வீட்டுக்கு தெரியாமலே கும்பகோணம் வந்து, அங்கேயே ஒரு டீ கடையில வேலை பாக்க ஆரம்மிச்சிட்டன்.
இரண்டு வருசம் இப்படியே போச்சி. இரண்டு வருசத்துக்கு அப்பறம் நானே சொந்தமா கும்பகோணத்துல டீ கடை ஆரம்பிச்சிட்டேன். முதல்ல ஒரு கடை ஆரம்பிச்சேன். அப்பறம் இரண்டு, மூணுன்னு இ்ப்படியே நாலு கடை சொந்தமா வச்சிட்டேன். கடையெல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்துச்சி. ஆனா, கடையில வேலை பாத்த ஆளுங்கலால கடை கொஞ்சம் கொஞ்சம் நட்டத்துல போயி, ஒரு கட்டத்துல நாலு கடையுமே கையைவிட்டு போச்சி.
என்ன பன்றதுன்னுனே தெரியல. முதலாளியாய் வேலை பாத்த இடத்துல தொழிலாளி வேலைப்பாக்கவும் அவமானமாவும் இருந்துச்சி. அவமானத்துல கும்பகோணத்துல இருக்க முடியாம, என்னோட நண்பர் ஒருத்தரோட உதவியால மாயவரம் வந்துட்டேன்.

இங்க வந்து ஒரு வருசம் ஹோட்டல்ல வேலை பாத்தேன். திரும்ப ஒரு தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்து வேளைக்கு இரண்டு ஆளு போட்டு சிப்ஸ், பக்கோடா, பஜ்ஜி, வடை, முறுக்கு, ஸ்வீட்ன்னு எல்லாம் செஞ்சி விக்க ஆரம்பிச்சேன். வியாபாரம் அமோகமா இருந்துச்சி.
ஆறு மாசத்துலே சொந்தமா தள்ளுவண்டியும் வாங்கிட்டேன். ரொம்பவே நல்லா போயிட்டு இருந்த வியபாரம் ஒரு கட்டத்துல குறைய ஆரம்பிச்சிடுச்சி. ஆளுங்களுக்கும் சம்பளம் கொடுத்து கட்டுபடி ஆகல. அதனால, நானே தனியா நடத்தாலான்னு முடிவு பண்ணி தனியா வியாபாரம் பண்ண ஆரம்பிச்சி, 15 வருசமா தனியா மசால் வடை மட்டும்தான் செஞ்சி விக்கிறேனே.
நான் தனியா ஆரம்பிச்ச புதுசுல கணக்கே இல்லாமா வடை தட்டுவேன். போகப்போக நெறைய செய்ய முடியல. அதனால் ஒன்பது பத்துக்கிலோனு செஞ்சேன். இப்ப ஒரு ரெண்டு வருசமா அதுவும் முடியல.

அஞ்சி ஆறு கிலோதான் மட்டும் தான். வாரத்துல ஏழு நாளும் கடை போட்டு இருந்த நானும் முடியலன்னு இப்போ அஞ்சி நாள் தான் போடுறேனே. எங்க வீட்டம்மாவுக்கு வேற உடம்பு சரியில்ல. அதுனால, ஒரு வருசமா நான் மட்டும் தான் நள்ளிரவு1 மணிக்கு எழுந்துருச்சி வெங்காயம் வெட்றது, கருவேப்பிலையே சன்னமாக்குறது, மாவு அரைக்கிறதுன்னு இப்டே ஆறு மணி வரையும் ஒன்னு ஒன்னுன்னா எல்லா வேலையும் செய்வேன்.
அப்பறம் ஆட்டோல மாவையெல்லான் ஏத்திகிட்டு, காலையில 7 மணிக்கெல்லாம் கடைக்கு வந்து வடையை தட்ட ஆரம்பிச்சிட்டுவேன். எப்படியும் ஐநூற்றம்பைது மேல வடை தட்டனும். வடையை தட்டி முடிக்க11 மணி ஆகிடும்.
கொரனோ முன்னாடி வரையும் வடை ஒரு ரூயாய்க்கு தான் கொடுத்துட்டு இருந்தேன். அதுனாலே எனக்கு வாடிக்கையாளர்கள் ரொம்பவே அதிகம். விலைவாசி ஏறுனதுனால இரண்டு ரூபாய்க்கு விக்க ஆரம்பிச்சிட்டேன்.

இதலாம் வித்தாலே முதலீடு போவ டெய்லியும் 300 ரூபாய் கிடைக்கும். இதுவே போதும் எனக்கும் என் மனைவிக்கும். சந்தோஷமா இருப்போம்.
எனக்கு இரண்டு பையனும், ஒரு பொண்ணும் இருக்காங்க. ஆனா, நான் அவங்களலான் எதிர்ப்பார்த்து இருக்குறது இல்லை. இந்தக்காலத்துல யாரும் புள்ளைங்க செய்வாங்கன்னுலான் நெனைக்கக் கூடாது. நம்மளால முடிஞ்ச அளவு நம்மள நாமே பாத்துக்கணும். கை கால் நல்லா இருக்குற வரையும் முடிஞச அளவு யாரையும் தொந்தரவு பண்ணாம உழைச்சி சாப்பிடணும்" என்று தன்னபிக்கை ஊட்டி நம்மிடம் இருந்து விடைப் பெற்றார்.
தாத்தாவின் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் பேசியபோது, `தாத்தா கடையோட வடை டேஸ்ட வேற எங்கையும் பாக்க முடியாது. அவ்ளோ டேஸ்டா இருக்கும். நான் இந்த சைடு வந்தாலே வடை வாங்கிட்டுதான் போவேனே. ஒரு சில டைம்ல சாப்பிடறதுக்கு காசு இல்லன்னா கூட தாத்தா கடையில 10 ரூபாய்க்கு வடையும் பக்கத்து கடையில ஒரு டீயும் குடிச்சா போதும் வயிறு நெறைஞ்சிடும். அதுமட்டுமில்லா, தாத்தாவ பார்த்தாலே இந்த வயசுலையும் உழைச்சி சாப்பிடுறாங்கன்னு ரொம்ப பெருமையாகவும் ஆச்சிரியமாவும் இருக்கும்' என்றார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)