அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது 18 பெண்கள் இறப்பு - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

Jul 14, 2026 - 17:01
0
அரசு  மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது 18 பெண்கள் இறப்பு - ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மே மாதம் முதல் பிரசவத்திற்குப் பிறகு 18 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ள இத்தொடர் தாய்மார்களின் இறப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் கடந்த 5ம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பில்வாரா மற்றும் பன்ஸ்வாரா ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது ஒன்பது பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மகப்பேறு மருத்துவமனையில், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஐந்து பெண்கள் ஆறு நாள்களுக்குள் உயிரிழந்தனர்.

கஜேந்திர சிங்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த ஐந்து பெண்களுக்கும் உடல்நலச் சிக்கல் ஏற்பட்டதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதோடு கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மே மாதத்தில் ஐந்து பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளனர். இது தவிர கடந்த மாதத்தில் பிகானேரில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆறு பெண்களுக்குச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பெண்கள் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளனர். இந்த மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,"இவ்வளவு குறுகிய காலத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்வது எங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதற்கான காரணத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் வெப்பத்தின் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக நாங்கள் கருதினோம், ஆனால் இப்போது வெப்பம் தணிந்துவிட்டது.

கோட்டா, ஜோத்பூர் மற்றும் பிகானர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், மருத்துவமனைத் தலைவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஆலோசனைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ரத்தப் பரிசோதனை முடிவுகள் தெளிவாக உள்ளன. மற்ற அனைத்தும் சரியாகவே தெரிகின்றன. இருப்பினும், இச்சம்பவங்களுக்கான அடிப்படை அல்லது உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டியுள்ளது. அலட்சியம், கவனக்குறைவு அல்லது குறிப்பிட்ட மருத்துவத் தவறு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மருத்துவர்கள் அல்லது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்'' என்றும் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User