ஶ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்: ``நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்" - திமுக பிரமுகர் ராம்குமார்

Sep 19, 2026 - 19:01
0
ஶ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்: ``நீதிமன்றம்  உரிய நடவடிக்கை எடுக்கும்" - திமுக பிரமுகர் ராம்குமார்

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலையிட்டு தற்போது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு அந்த தி.மு.க பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 தி.மு.க செயலாளர் ராம்குமார்
தி.மு.க செயலாளர் ராம்குமார்

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பிரமுகர் ராம்குமார், ``இந்த இடம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது. எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களையும் தேவையான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். இந்து சமய அறநிலையத்துறையின் 1930AA பதிவேடு மற்றும் சொத்து பேரேட்டில் இந்த எண் இல்லை. சார்பதிவாளர் முறையாக விசாரணை நடத்தி, சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பத்திரப் பதிவு செய்வார்.

நீதிமன்றம் இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதால் அதற்காகக் காத்திருக்கிறோம். என் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பது குறித்துக் கேட்கிறீர்கள். என் சொந்தக் கட்சியிலேயே எனக்கு வேண்டாதவர்களும் எதிரிகளும் இருப்பார்கள். இதெல்லாம் அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் சகஜமான ஒன்றுதான். யார் இந்தச் செயலைச் செய்திருந்தாலும், அதை அந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாளின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். அறநிலையத்துறை அமைச்சரே இதில் ஈடுபட்டிருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் துருவித் துருவிக் கேட்டாலும், அதையும் அந்த ரங்கநாதரிடமே விட்டுவிடுகிறேன். நான் தவறு செய்திருந்தால் பெருமாள் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

அமைச்சர் ரமேஷ்
அமைச்சர் ரமேஷ்

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது புகார் அளித்தவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் புகார் அளித்தார்களா என்ற கேள்வி எழுகிறது. காவல்துறை தரப்பிலிருந்து என்னை விசாரணைக்கு இன்னும் அழைக்கவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இது தொடர்பான கூடுதல் விவரங்களை என் வழக்கறிஞர்தான் தெரிவிக்க வேண்டும். நான் கூற முடியாது. ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் புகார் அளித்திருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் அது குறித்து எனக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வரவில்லை. தகவல் ஏதேனும் வந்தால் தெரிவிக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எங்கள் வழக்கறிஞரும் கட்சியும் முடிவு செய்வார்கள்."

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User