’எங்களுக்கு வேற வழியில்ல’– கோவையில் கருகும் வாழையைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்!

Sep 19, 2026 - 09:01
0
’எங்களுக்கு வேற வழியில்ல’– கோவையில் கருகும் வாழையைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்!

வானம் பார்த்த பூமியில் மழைக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பசுமை போர்த்தியிருக்க வேண்டிய விளைநிலங்கள் பச்சையத்தை தொலைத்துவிட்டு மஞ்சளும் பழுப்புமாக பரிதவித்து நிற்கின்றன. சில நாட்களுக்கு முன்பு வரை காற்றில் தலைஅசைத்த பயிர்கள், இன்று வெறும் சருகுகளாக பறக்கின்றன. வாடிய பயிர்களின் தாகத்தை தீர்க்க வழிதெரியாமல் வாடிய முகத்துடன் இருக்கும் விவசாயிகள் பல மாத உழைப்பு, வெயிலில் கரையும் பனித்துளியாக கரைகிறது. இதுதான் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களின் நிலை. இதற்கு ஒரே காரணம் ’எல் நினோ’.

தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்
தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

கடும் வெயில் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் சரிவு காரணமாக, பாசனக் கிணறுகளும், ஆழ்துளைக் கிணறுகளும் அடுத்தடுத்து வறண்டு வருகின்றன. இதன் காரணமாக அறுவடைக்குத் தயாராக உள்ள வாழைப் பயிர்களைக் காப்பாற்ற லாரிகள் மூலம் கூடுதல் விலை கொடுத்துத் தண்ணீர் வாங்கிப் பாய்ச்ச வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்
தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

இது குறித்து அன்னூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது, “பருவமழை கைகொடுக்கும்னு நம்பி பயிர்களை விளைவிச்சோம். ஆனா மழை கைகொடுக்கல. எப்போதாவது கொஞ்சமா தூறிட்டு போயிடுச்சு. அதனால என்னோட போர்வெல், கிணறு எல்லாம் தண்ணீ இல்லாம வற்றி போயிருக்கு. ஆயிரம் அடிக்கும் மேல போர் போட்டாலும் தண்ணீ வருவதில்ல. இதனால நிறைய இடங்களுல கரும்பு, வாழை எல்லாம் காய்ந்து கருகிட்டு இருக்கு. இப்படியொரு மோசமான வறட்சியை நாங்க பார்த்தது இல்ல. இதனால நிறைய விவசாயிகளுக்கு நஷ்டமாகிட்டு இருக்கு.

வாழைகள்
வாழைகள்

அறுவடைக்கு தயாரா கொஞ்சம் நல்லா இருக்குற வாழைகளைக் காப்பாத்த வேறு வழியில்லாம கொஞ்சம் வசதி இருக்குற விவசாயிகள் டிராக்டர், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீ வாங்கி ஊத்துறோம். ஒரு டேங்கர் தண்ணீருக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை விலை கொடுத்து வாங்கி சமாளிச்சிட்டு இருக்கோம். இனி வரும் நாள்களில் மழை பெய்யலான தண்ணீயும் கிடைக்காம போயிடும். தொடர்ந்து தண்ணீரை விலை கொடுத்து வாங்கி ஊத்தி விவசாயத்தை காப்பாத்த முடியுமா? மழையில்லனா ஒட்டுமொத்தமாக விவசாயத்தை கைவிடுற நிலைக்குத் தள்ளப்படுவோம்” என வேதனையுடன் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User