சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா தொடர்ந்து தள்ளிப் போவது ஏன்?

May 29, 2026 - 14:01
0
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா தொடர்ந்து தள்ளிப் போவது ஏன்?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க, 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்கள், ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் புதிய ஆட்சியை அமைத்தார்.

முதல்வராக அவர் பொறுப்பேற்றதும் பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்புக்காக காவல்துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை என்ற புதிய பிரிவு உருவாக்கப்படும் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பிரிவுக்கு ஐஜி பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.

இதன் தொடக்கவிழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மே 27-ம் தேதி நடத்தப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்தன. ஆனால் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்திக்க டெல்லி சென்றதால் தொடக்கவிழா தள்ளிவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மே 29-ம் தேதி(இன்று) விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் தொடக்க விழா தள்ளி வைக்கப்படுவதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா தொடர்ந்து தள்ளிப் போவதற்கு என்ன காரணம் என சென்னை காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

``இந்த விழாவை இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் திடீரென டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து விழா தள்ளி வைக்கப்படுவதாக தகவல் வந்தது. ஆனால் அதற்கான எந்த காரணத்தையும் டி.ஜி.பி அலுவலகம் தரப்பில் எங்களிடம் தெரிவிக்கவில்லை. விழாவுக்கான தேதி மீண்டும் அறிவிக்கப்படும் போது ஏற்பாடுகளை செய்வோம்'' என்றனர்.

அதைத் தொடர்ந்து டி.ஜி.பி அலுவலக வட்டாரத்தில் கேட்ட போது, ``மே 29-ம் தேதி விழாவை நடத்தலாம் என எங்களுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு தகவல் வந்தது. அதனால்தான் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தோம். திடீரென விழாவை தள்ளி வைத்துவிட்டார்கள். விரைவில் பிரமாண்டமாக விழா நடத்தப்படும்" என்றனர்.

ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ``சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு புதிய டி.ஜி.பியை நியமிக்க யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்து விட்டது. தற்போது தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோருக்கு எதிராக சிலர் லாபி செய்கிறார்கள். அதனால் யுபிஎஸ்சி பட்டியலில் உள்ள ராஜீவ்குமார், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரில் ஒருவரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.

புதிய டி.ஜி.பியை நியமித்தப்பிறகு சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா நடத்தலாம் என சிலர் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அதனால்தான் விழா இரண்டாவது தடவையாக தள்ளிப் போயிருக்கிறது" என்றனர்.

தமிழக அரசு

காவல்துறை சார்பில் நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி என்பதாலும் முதல்வர் பங்கேற்பதாலும் விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் டி.ஜி.பி அலுவலகத்தில் வட்டமடிக்கிறது. ஆனால் விழா தள்ளிப் போவதற்கு அதிகாரப்பூர்வ காரணம் என்னவென்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User