‘மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?’ – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

Jun 21, 2026 - 08:31
0
‘மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?’ – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் பார்ப்பது தொடர்பாக வந்திருக்கிறோம். தகுதியான இடம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி இருக்கிறோம். முதல்வர் விஜய்  பிரதமரை சந்திக்கும் போது, கோவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. கூடிய விரைவில் இது குறித்து அறிவிப்போம். இடத்தை கண்டறிந்து விட்டு, எந்த இடம் என்பதை சொல்கிறோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். பல வருடங்களுக்கு பின்னர் பணிகள் துவங்கி இருக்கிறார்கள். பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை பிற மாநிலங்களை விட மருத்துவ வசதிகள் சிறப்பாக இருக்கிறது. ஆனால் தேவைகள் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின்  லட்சியம். போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி, மருத்துவ பயனாளிகளின் அனுபவமும் சுத்தமாக சிறப்பாக இருக்க வேண்டும்  என்பதில் கவனம் செலுத்துகிறோம். நீட் தேர்வு காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்தது மிகவும் வருந்தக்கூடிய விஷயம். இரு குழந்தைகளை இழந்திருக்கிறோம். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது. இதற்கு நிரந்தர தீர்வாக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஆளூநர் உரையிலும் இதை சொல்லி இருக்கிறோம்.

அருண்ராஜ்
அருண்ராஜ்

இது போன்ற தவறான முடிவுகளுக்கு செல்ல வேண்டாம். மாணவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம். கண்டிப்பாக மாணவர்களுக்கு மன உளைச்சல்  இருக்கிறது. அதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஒரு முறை தேர்வு வைத்து , ரத்து செய்து மீண்டும் தேர்வு வைப்பது என்பது மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது என்பது உண்மை. தமிழக அரசு பிரத்யேகமாக 104 என்ற உதவி மையம் வைத்திருக்கிறோம். அதில் மனநல நிபுணர்கள் இருப்பார்கள். இதை பயன்படுத்திக் கொள்ளலாம். நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் முதல்வர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவம் ஒரு படிப்பு தான். கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை முடிந்து போகவில்லை. நீட் பிரச்சினைக்கு தீர்வு காண சட்டமன்றத்தில் தீர்மானம் மட்டுமல்ல,  சட்ட ரீதியிலும் அனைத்து வழிகளையும் ஆலோசனை  செய்வோம். தமிழகத்தில் மருத்துவமனை கட்டடங்கள் நிறைய பாழடைந்து இருக்கிறது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதற்கு முன்னதாக அன்னூர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அருண் ராஜிடம் மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது படிப்படியாக செயல்படுத்த வேண்டும். அதனை செயல்படுத்த அவகாசம் தேவை. மாநிலத்தின் நிதிநிலை அந்தளவில் உள்ளது” என பதிலளித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User