விசிக: `ஸ்டாலின் அண்ணனின் மனசாட்சிக்குத் தெரியும்' - தொல்.திருமாவளவனின் உருக்கம்

May 27, 2026 - 13:01
0
விசிக: `ஸ்டாலின் அண்ணனின் மனசாட்சிக்குத் தெரியும்' - தொல்.திருமாவளவனின் உருக்கம்

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோவையிலிருந்து தன் தொண்டர்களுடன் முகநூல் லைவ் மூலம் உரையாடினார். அந்த உரையில், ``அரசியல் நெருக்கடியை உணர்ந்துதான் தவெக அரசுக்கு நம் ஆதரவை வழங்கியிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்றக் கூட்டணியில் இருந்திருக்கிறோம். எனவே, நம் முடிவுகள் குறித்து விமர்சனம் எழுவது இயல்பு, அதை தவிர்க்க முடியாது. இதில் வருந்தவோ, அல்லது ஆத்திரப்படவோ கூடாது.

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிப்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதை வெற்றிகரமாக முறியடித்தோம். இஸ்லாமிய, கிறிஸ்த வாக்குகளை பெருமளவில் தவெக பிரிக்கும். இதனால் திமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழக்கும் என்ற கணிப்பு நம்மிடம் இருந்தது.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

நானும் தமிழ்நாடு அரசியலில் தீவிரமாக இயங்க வேண்டும் என தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்தேன். ஆனால், தேர்தல் முடிவு எதிர்பார்க்காத வகையில் அமைந்தது. அதன் பிறகே தீவிர ஆலோசனைக்குப்பிறகு வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டுக்கு வந்தோம். இதற்கு இடையில்தான் என் மீது பேரம் பேசுகிறார், துணை முதல்வராக கேட்கிறார், முதல்வராக முயற்சிக்கிறார் என்றெல்லாம் அவதூறுகளை அள்ளி வீசினார்கள். கரூரில் 41 பேர் இறந்தபோது ஆதவ் அர்ஜுனாவை தொடர்புகொண்டு பேசி, நடந்தவைகள் குறித்து விசாரித்து, ஆறுதல் கூறினேன். விஜய்யிடன் மனம் தளரவேண்டாம் எனக் கூறச்சொன்னேன்.

சமீபத்தில் ஆ.ராசா நம் மீது விமர்சனம் முன்வைத்தார். காங்கிரஸ், இடதுசாரிகள் என பலரும் அணி மாறிய நிலையில், நம் மீதுதான் இப்படியான விமர்சனம் வைத்திருக்கிறார். ஆதரவு நிலைப்பாடு எடுத்தபோது அண்ணன் ஸ்டாலினிடம் பேசிவிட்டுதான் ஆதரவு தெரிவித்தோம். ஆனால், அமைச்சரவை இடம்பெறும்போது அண்ணன் ஸ்டாலிடன் பேசவில்லை. ஆனால், சில முன்னணி முன்னாள் அமைச்சர்களிடம் பேசி தகவல் தெரிவித்தோம். நாம் எடுத்த இந்த முடிவை ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட சிலர் புரிந்துகொண்டார்கள்.

திருமாவளவன், ஸ்டாலின்
திருமாவளவன், ஸ்டாலின்

ஆனால், ஆ.ராசா போன்ற பலருக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது புரிகிறது. எனவே, அவர்களின் ஆதங்கத்தில் ஒரு நியாயம் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, திமுகவுக்கு எதிராக விமர்சனமோ, அல்லது போராட்டமோ தேவையற்றது. நம் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும். நம் மீது விமர்சிப்பவர்கள் எப்போதும் விமர்சனங்களை பேசிவருகிறார்கள். விசிக மதச்சார்பற்ற கூட்டணிக்கு எவ்வளவு உண்மையாக இருந்தது என்பது ஸ்டாலின் அண்ணனின் மனசாட்சிக்குத் தெரியும். எனவே, நாம் தேவையற்ற கவனச் சிதறல்களைத தவிர்ப்போம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User