தூத்துக்குடி துறைமுகம்: ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு இந்திய அளவில் சாதனை!

Mar 11, 2026 - 16:02
 0
தூத்துக்குடி துறைமுகம்: ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு இந்திய அளவில் சாதனை!

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்குகளைக் கையாளுவதில் ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகளைக் கையாண்டு தேசிய சாதனையைப் படைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோகித், “இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களைக் கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஒரே கப்பலில் 103 காற்றாலை இறகுகளைக் கையாண்டதே சாதனையாக இருந்தது.

காற்றாலை இறகுகள் ஏற்றி வந்த கப்பல்
காற்றாலை இறகுகள் ஏற்றி வந்த கப்பல்

தற்போது அந்தச் சாதனையை வ.உ.சி துறைமுகம் முறியடித்துள்ளது. சீனாவின் 'சின்சோ' (Qinzhou) துறைமுகத்திலிருந்து 'எம்.வி. போ ரன் ஜியூ சோ'என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட, தலா 76 மீட்டர் நீளமுள்ள இந்த 147 இறகுகளும் வெற்றிகரமாக இறக்கி முடிக்கப்பட்டன.

75% அதிரடி வளர்ச்சி

இந்த நிதியாண்டில் பிப்ரவரி 2026 வரை வ.உ.சி துறைமுகம் மொத்தம் 4,211 காற்றாலை இறகுகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் (2,395 இறகுகள்) ஒப்பிடுகையில் 75.82% வளர்ச்சியாகும்.

காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் இந்தியாவின் முன்னணி துறைமுகமாகத் திகழும் வ.உ.சி துறைமுகம், தனது உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி வருகிறது.

காற்றாலைகள் இறக்குமதி
காற்றாலைகள் இறக்குமதி

துறைமுகத்தின் உட்பகுதியில் 60,000 சதுர மீட்டர் கூடுதல் சேமிப்பு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மேலும் 1,80,000 சதுர மீட்டர் பரப்பளவு சேமிப்பு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

பிரதமர் நரேந்திர மோடியின் 'Maritime Amrit Kaal Vision 2047' திட்டத்தின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்சார் துறையை உருவாக்க இத்துறைமுகம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0