`அந்தப் பதவிக்கு சம்பளம் 10,000 ரூபாய்.!' - முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேட்டி

Jul 01, 2026 - 16:31
0
`அந்தப் பதவிக்கு சம்பளம் 10,000 ரூபாய்.!' - முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேட்டி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது தமிழக அரசியல் களத்தில் சலசலப்புகளை உண்டாக்கி விட்டிருக்கிறது.

திமுக, அதிமுக ஆகிய எதிர்க் கட்சிகளுடன் தவெக அரசை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுமே இந்த நியமனத்தை ஏற்கவில்லை.

ஆனால், தன் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பன்டிட் வெற்றிவேலை அரசியல் ஆலோசகராக நியமித்து விட்டு எதிர்ப்பு வந்த பின், அந்த நியமனத்தை ரத்து செய்தது போல் இந்ந முறை விஜய் பின்வாங்க மாட்டார் என்கிற பேச்சுகள் கோட்டை வட்டாரத்தில் கேட்கின்றன.

இந்தச் சூழலில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் வேலை என்ன, அவருக்கு சிறப்பு அதிகாரமென எதுவும் உண்டா என்பன போன்ற கேள்விகளுடன் அதிமுக ஆட்சிக் காலத்தில் `இதே' பதவியிலிருந்த தளவாய் சுந்தரத்திடம் பேசினோம்.

தளவாய் சுந்தரம் மேடையில்

''இந்தப் பதவிக்கு யாரை நியமிக்கணும்கிறது தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை மற்றும் அதிகாரம். தனக்கு ரொம்பவும் நம்பிக்கையான நபர்களையே நியமிப்பார் முதல்வர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான தொடர்பு, தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதுதான் இந்த அலுவலகத்தின் முக்கியமான பணி.

டெல்லியில் தனி அலுவலகம் இருக்கும். அதிகாரிகள், ஊழியர்கள் இருப்பாங்க. அதிகார மட்டத்துல ஆணையர்ங்கிறவர் பொறுப்பு அதிகாரி.

அரசியலமைப்பு சார்ந்த பதவிதான் 'தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி'னு அழைக்கப்படுது. நான் இந்தப் பதவியில இருந்தப்ப கொஞ்ச நாள் முன்னாடி இங்க தலைமைச் செயலாளரா இருந்த முருகானந்தம் அங்க ஆணையரா இருந்தார்.

முதலமைச்சரோ மற்ற அமைச்சர்களோ டெல்லி வந்தா, அங்க அவங்களுடைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கறது, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க வேண்டி இருந்தா அதற்கான ஏற்பாடுகளைச் செய்யறது, மாநில அரசின் கோரிக்கைகள் மத்திய அமைச்சகங்களிடம் இருந்தால் அதை ஃபாலோ செய்து தீர்வு காண்பதுன்னு பணிகள் இருக்கும்.

முதல்வருக்கும் ஆளுநருக்கும் இந்த பங்களாவுல தனி அறைகள் இருக்கும். மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் எங்காவது வெளிநாடுகளில் சிக்கல்களைச் சந்தித்தால் சமப்ந்தப்பட்ட நாட்டின் தூதரகங்கள் மூலம் பேசி அவற்றிற்கு தீர்வு காண்பதும் சிறப்பு பிரதிநிதியோட வேலைதான்.

நான் இருந்தப்ப அந்த மாதிரி பாதிக்கப்பட்ட நிறையப் பேரை மீட்டு வந்திருக்கேன்.

பொதுவா கட்சியில சீனியரான ஆட்கள், டெல்லியை நன்கு அறிந்தவர்கள், டெல்லி அரசியல்வாதிகளூடன் நல்ல தொடர்பை பேணி வருகிறவற்காளாப் பார்த்துதான் நியமிப்பாங்க.

மாநிலத்தில் தீவிர அரசியலில் இயங்கிட்டிருக்கிறவங்க பெரும்பாலும் இந்தப் பதவிக்கு ஆர்வம் காட்டுவதில்லை.

டெல்லி

சிறப்பு பிரதிநிதிக்கு மாநில அமைச்சருடைய அந்தஸ்து உண்டு. சைரன் வச்ச கார், தேசிய கொடினு அந்த புரொட்டா கால் இருக்கும். சம்பளம் நான் இருந்த வரைக்கும் மாதம் பத்தாயிரம் ரூபாயா இருந்தது. அதுக்குப் பிறகு உயர்த்தினாங்களா தெரியாது. வீடு, சாப்பாடு, இலவச விமானப் பயணம்னு சில சலுகைகள் இருக்கு.

அதேநேரம் மத்தியில் ஆளுகிற கட்சிக்கும் மாநிலத்துல ஆளும் கட்சிக்கும் இடையில் நல்ல ரிலேஷன்ஷிப் இருந்தா சிறப்பு பிரதிநிதியின் வேலையும் சுமூகமா போகும். அப்படி இல்லாதபட்சத்துல ஏதோ போகுதுனு சொல்வாங்க இல்லையா, அதுதான் நடக்கும்'' என்கிற தளவாய் சுந்தரம், தான் பதவி வகித்த அந்தக் காலங்களில் தன் சம்பளமான அந்த பத்தாயிரத்தையும் வாங்கவில்லையாம்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User