`டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; இனியும் ரூ.10 கூடுதலாகப் பெற்றால்..!' - அமைச்சர் விக்னேஷ்

Jul 07, 2026 - 20:01
0
`டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; இனியும் ரூ.10 கூடுதலாகப் பெற்றால்..!' - அமைச்சர் விக்னேஷ்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விலைக்கு மேல் ரூ.10 பெறப்படுவதாக கடந்த திமுக ஆட்சியிலிருந்து குற்றச்சாட்டு தொடர்கிறது. தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதும் இந்த நடைமுறை நிறுத்தப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், இன்றளவும் பாட்டிலுக்கு ரூ.10 பெறுவது தொடர்கதையாகியிருக்கிறது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர் , ``தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு 25 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும். இதுவரை டாஸ்மாக் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டதில்லை. இதன் மூலம் ஊழியர்களுக்கு மாதம் ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும்.

டாஸ்மாக் கடை

இந்த ஊதிய உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக 110.74 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். மொத்தமாக டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்திற்காக 553.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு அடுத்த மாதங்களில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

ஊதிய உயர்வு மட்டுமன்றி, டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ளும் வகையில், கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இ.எஸ்.ஐ (ESI) மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், ஊழியர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், மதுபானப் பெட்டிகளை இறக்குவதற்கு ஆகும் போக்குவரத்துச் செலவுகளைத் துறையே ஏற்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டணம் மற்றும் கடை வாடகை தொடர்பான சிக்கல்களும் விரைவில் முறைப்படுத்தப்படும்.

அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களுக்கு, இந்த ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஊழியர்களின் நியாயமான தேவைகளை அரசு நிறைவேற்றியுள்ளதால், இனி நுகர்வோரிடம் கூடுதல் பணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. இதுவரை கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் 30 முதல் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இனிமேலும் இந்த விதிமீறல் தொடர்ந்தால், பணியிடை நீக்கத்தைத் தாண்டி பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இதற்கு கடை ஊழியர்கள் மட்டுமன்றி மாவட்ட மேலாளர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த ஊதிய உயர்வால் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது. 21 வயதுக்கு உட்பட்டவர்களை பப்கள் (Pubs) மற்றும் எஃப்.எல்.3 (FL3) உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களுக்குள் அனுமதித்தால், அந்த நிறுவனங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User