’தேசிய கீதம் இரண்டு முறை பாடுவது மரபு மீறல் இல்லை’ - எம்பி., சு.வெங்கடேசன்

Jun 22, 2026 - 08:01
0
’தேசிய கீதம் இரண்டு முறை பாடுவது மரபு மீறல் இல்லை’ - எம்பி., சு.வெங்கடேசன்

திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில்  த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து, அமைச்சர் நிர்மல்குமாரை நாற்காலியில் அமர வைத்தனர்.

இதை தொடர்ந்து மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ தேசிய கீதத்தை இரண்டு முறை பாடுவது மரபு மீறல் என்பதெல்லாம் கிடையாது. தேசிய கீதத்தை இருபது முறை கூட பாடலாம். தேசிய கீதத்திற்கு யாரும் எதிரி கிடையாது. அது நம்முடைய தேசிய கீதம், நம்முடைய நாட்டு கீதம்.

 நாடாளுமன்றத்தில் குடியரசு  உரைக்கு முன்னாலும் தேசிய கீதம் பாடப்படும்.குடியரசுத் தலைவர் பேசி முடித்த பிறகும் தேசிய கீதத்தைப் பாடுவார்கள்.

தமிழ்நாட்டில இந்த முக்கியமான பிரச்னை எழக் காரணம் வந்தே மாதரம். வந்தே மாதரத்தைப் பாட வேண்டுமென்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியதன் அடிப்படையில், கவர்னர் அலுவலகத்தில் நடந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரத்தை முதல் பாடலாகப் பாடினார்கள். அது ஒரு பிரச்னை. வந்தே மாதரத்தில் நம்முடைய நாட்டை ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளாக சித்தரித்து பாடுவது போல நான்கு பத்திகள் இருக்கிறது.

மோடி - அமித்ஷா

எனவே அந்த நான்கு பத்திகளையும் பாடக் கூடாது என அரசியல் நிர்ணய சபையில் முடிவு செய்தார்கள். அதை மீறி இப்பொழுது மோடியும் அமித் ஷாவும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்.

அது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தனிமனித மத சுதந்திரத்திற்கு எதிரானது. தனிமனித உரிமைக்கு எதிரானது. வேறு மதத்தைச் சார்ந்தவர்களையும், வேறொரு மதத்தினுடைய கடவுளை வழிபட்டு பாடச் சொல்வதற்கு அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்களையும் இந்தப் பாடலை பாட வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

இன்னும் சொல்லப்போனால், அடுத்தவர் என்ன பாடல் பாட வேண்டும் என்பதனை மோடியும் அமித் ஷாவும் முடிவு செய்ய முடியாது. வந்தே மாதரம் பாடக்கூடாது என்பது ஏற்கனவே இருந்த நிலைப்பாடு. அது இப்போது அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் தாய் வாழ்த்து முதலிலேயே பாடப்பட்டிருக்கிறது.

சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.

அதிலும் மிக முக்கியமான முடிவுகளை அரசு எடுத்தது என்பதும், தேசிய கீதம் இரண்டு முறை பாடுவதில் எந்த பிரச்னையும் யாருக்கும் கிடையாது. அது நம்முடைய பாடல், எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாம். தேசிய கீதத்திற்கு எதிரானவர்கள் என்று யாரும் கிடையாது. எனவே அது மரபு மீறல் என்று சொல்வது பொருள் அல்ல, ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்படுவதாகவே நான் கருதுகிறேன். அதில் உண்மையிலேயே குற்றம் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User