`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல...' - தொல்.திருமாவளவன்

Jun 29, 2026 - 19:31
0
`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல...' - தொல்.திருமாவளவன்

ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த, சென்னையில் இருந்து விமானம் மூலம் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், சாலை மார்க்கமாக ஆண்டிமடம் சென்றார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தொல்.திருமாவளவன்,

"எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல. எந்தப் பின்னணியில் இதை அவர்கள் செய்கிறார்கள் என்னது தெரியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. கூட்டணிக் கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லாமல் த.வெ.க-வினர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்கிறார்களா என்று கேட்கிறீர்கள். யூகமான கேள்விகளுக்கு யூகமாக பதில் சொல்ல முடியாது. நாங்கள் த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு உறுதியாக இருக்கிறோம். இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் தொடர வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். அதில், எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஊசலாட்டமும் இல்லை. ம.தி.மு.க விவகாரம் குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். என்.எல்.சி பங்குகளை விற்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. மெல்ல மெல்ல தனியார்மயப்படுத்துவதை தொடர்ந்து ஒன்றிய அரசு செய்கிறது. அவ்வாறு விற்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், தமிழ்நாடு அரசு அதை வாங்கிக் கொள்ள வேண்டும். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த ஆகியோர் நேற்று சந்தித்தார்கள். முறைப்படி அனைத்து ஆதரவு தருகிற கட்சிகள், தோழமை கட்சிகளுக்கும் இந்த அழைப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.

திருமாவளவன்

கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கிற ஒரு நிகழ்வாக இருக்கும். அந்த நிகழ்விலே முதலமைச்சர் பேசுவார். த.வெ.க கூட்டணிக்கு ஒரு முழுமையான வடிவம் கொடுக்கும் கூட்டமாக அது இருக்கலாம். கூட்டம் முடிந்த பின்பு தான் அது குறித்து தெரியும். கரூரில் உயிரிழந்த மக்களை முதலமைச்சர் என்ற முறையில் சந்தித்திருக்க வேண்டும். அவர்கள் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உள்ளது. இடைத்தேர்தலில் நான் பங்கேற்க போவதில்லை. ஆனால், ஊடகங்கள் யூகங்களாக செய்திகளைப் பரப்புகிறார்கள். த.வெ.க-விடம் எந்த நிர்பந்தமும் வைக்கவில்லை. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கவில்லை. ஊடகங்களே பரப்புகின்றன. அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது, உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User