Parithabangal: சர்ச்சையான காணொளி; குறிப்பிட்ட காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம் - பின்னணி என்ன?
'பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் இருந்து வெளிவந்திருந்த 'ஆடி மாத பாவங்கள்' காணொளியில் இருந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் இணையத்தில் சர்ச்சையாகியிருந்தது.
தற்போது அக்காட்சியை மட்டும் 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் டீம் அந்தக் காணொளியில் இருந்து நீக்கியிருக்கிறது.
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டபோது, அவருடைய மகன் சஞ்சய் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
அவரை கேலி செய்யும் வகையில், இந்த 'ஆடி மாத பாவங்கள்' வீடியோவில் கண்டெண்ட் இருப்பதாக சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், "தன் தந்தைக்கு எதிராக நடந்த ஒரு சட்டவிரோதமான செயலுக்குப் பிறகு, தன் வேதனையை வெளிப்படுத்த முயலும் ஒரு சிறுவனை, பரிதாபங்கள் யூடியூப் சேனல் கிண்டல் செய்திருப்பதைப் பார்ப்பதற்கு அருவருப்பாய் இருக்கிறது.
திறமையான கலைஞர்களைக் கொண்ட இந்தக் குழுவின் மிகப்பெரிய ரசிகனாக நான் இருந்திருக்கிறேன்.
ஆனால், ஒரு சிறுவன் வேதனையில் இருக்கும் இந்தச் சமயத்தில் அவனை இப்படிக் கேலி செய்திருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த அருவருப்பாக இருக்கிறது. இதை அவர்கள் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்தக் காணொளியில் விமர்சனம் செய்யப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்கியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல், "சமீபத்தில் எங்களது சேனலில் வெளியான "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி, சமூக வலைதளங்களில் சிலரின் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறோம்.

அந்தக் காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இருப்பினும், அது சிலரின் மனதைக் காயப்படுத்தியிருப்பதால், அந்தக் காட்சிகளை வீடியோவிலிருந்து நீக்கியுள்ளோம். பரிதாபங்களின் நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல" என அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)