சிறுமி பாலியல் வன்கொடுமை: ``எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு..." - எம்.பி கனிமொழி காட்டம்

Jun 04, 2026 - 18:31
0
சிறுமி பாலியல் வன்கொடுமை: ``எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு..." - எம்.பி கனிமொழி காட்டம்

திருச்சி கல்மந்தை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, திருநங்கையான தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, திருநங்கையை சிவகங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக மாரி செல்வன் என்ற வாடகை கார் ஓட்டுநர் அங்கு வந்துள்ளார். அவர் அச்சிறுமியை மட்டும் தனியாக காரில் ஏற்றிச் சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கழித்து, சிறுமியை காயங்களுடன் காரில் இருந்து கீழே வீசிவிட்டுச் செல்ல முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த ஓட்டுநரைத் பிடித்துத் தாக்கினர். காந்தி மார்க்கெட் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் மாரி செல்வன் அச்சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இக்கொடூர சம்பவத்திற்குப் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் - முதல்வர் விஜய்
டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் - முதல்வர் விஜய்

இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், ``திருச்சி - கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில் தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User