"ராமதாஸால் வயது மூப்பு காரணமாக முடிவுகளை எடுக்க முடியாது" - தன் மனுவில் அன்புமணி சொல்வது என்ன?

Mar 11, 2026 - 09:31
 0
"ராமதாஸால் வயது மூப்பு காரணமாக முடிவுகளை எடுக்க முடியாது" - தன் மனுவில் அன்புமணி சொல்வது என்ன?

"ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக ரீதியாக முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும்" என்று கோரி டாக்டர் அன்புமணி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்க டாக்டர் ராமதாஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவர் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு கட்சியை நிர்வகிப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்சிக்கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்த நிலையில், இதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, 'கட்சிக்கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என்று டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "ராமதாஸுக்குத் தற்போது 87 வயதாகிறது. வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக ரீதியாக அவரால் முடிவுகளை எடுக்க முடியாது, இதைப் பயன்படுத்தி ராமதாஸைச் சிலர் தவறாக வழி நடத்துகின்றனர்.

சிலரின் தூண்டுதலால் தன்னை தலைவர் எனத் தானே அறிவித்துக் கொண்டது பாமக சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல. கட்சி நிறுவனர் என்ற முறையில் கட்சிக்கு ஆலோசனை வழஙகலாம். ஆனால், பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது.

முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் உள்ளது. அந்த அடிப்படையில்தான் சின்னம் ஒதுக்கீடு சம்பந்தமாக அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது.

எனவே கட்சிக் கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, வழக்கு தொடர ராமதாஸுக்கு உரிமை இல்லை. அன்புமணியின் பதவி காலம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை உள்ளது" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிமன்ற விசாரணை
நீதிமன்ற விசாரணை

இதைத்தொடர்ந்து அன்புமணியின் மனுவுக்கு ராமதாஸ் தரப்பில் மார்ச் 11க்குள் (இன்று) பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார் நீதிபதி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0