புனே: "தண்ணீருக்காக தினமும் காட்டுக்குள் 4 மணி நேரம் நடக்கணும்" - பழங்குடியினப் பெண்களின் அவலநிலை

May 11, 2026 - 15:02
0
புனே: "தண்ணீருக்காக தினமும் காட்டுக்குள் 4 மணி நேரம் நடக்கணும்" - பழங்குடியினப் பெண்களின் அவலநிலை

மும்பைக்கு அண்டை மாவட்டமான தானே பகுதியில் இருந்துதான் தண்ணீர் சப்ளையாகிறது. ஆனால் அதே தானே மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தினமும் தண்ணிருக்காக 4 மணி நேரம் நடக்கும் அவல நிலை இருந்து வருகிறது.

மும்பையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்பர் வைத்தர்ணா அணையில் இருந்து மும்பைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அதே அப்பர் வைத்தர்ணாவிற்கு மேலே உள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கோடை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் வறண்டுவிட்டன.

அப்பர்வைதர்ணாவிற்கு மேலே இருக்கும் தபுர்மால் என்ற கிராமத்தில் குடிநீருக்காக இருந்த ஒரு குளமும் வறண்டுவிட்டது. இதனால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்களும், சிறுமிகளும் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக குடங்களுடன் தண்ணீருக்காக 6 முதல் 8 கிலோ மீட்டர் காட்டுக்குள் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

தினமும் 4 மணி நேரம் அவர்கள் தண்ணீருக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்ப வரும்போது பாதி வழி வந்ததும் தண்ணீர் குடத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது ஓய்வு எடுத்துக்கொள்கின்றனர். அதோடு தாங்கள் கொண்டு வந்த தண்ணீரில் சிறிது குடித்து இளைப்பாறிக்கொண்டு மீண்டும் பாறைகளும், மரங்களுடன் அடர்ந்த காட்டுக்குள் தண்ணீர் குடத்துடன் நடக்க ஆரம்பிக்கின்றனர். அங்குள்ள பெண்களுக்கு இது குழந்தை பருவத்தில் இருந்தே பழகிவிட்டது என்று அங்குள்ள பெரியவர்கள் தெரிவித்தனர்.

அப்பெண்கள் மலையில் கீழ் பகுதியில் இருக்கும் அப்பர்வைத்தர்ணா அணைக்கு வந்து தண்ணீரை எடுத்துச்செல்கின்றனர். அவர்கள் காடு, மலைகளைக் கடந்து வரும்போது பாம்பு போன்ற விஷப்பூச்சிகளிடமும் சில நேரங்களில் சிக்கிக்கொள்கின்றனர்.

இது குறித்து தினமும் 4 மணி நேரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் ரக்கா பாய் என்ற பெண் கூறுகையில், ''காலையில் எழுந்தவுடன் எங்களுக்கு தண்ணீர் எடுத்து வருவதுதான் எங்களது முதல் வேலை. அதன் பிறகுதான் மற்ற வேலைகளை முடித்துவிட்டு காட்டிற்குள் விறகு எடுக்க செல்வோம்.

இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சம்பவம் என்பதால் எங்களுக்குப் பழகிவிட்டது. அரசு எங்களுக்கு குடிநீர் வசதி செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User