வேளாண் பட்ஜெட்டுடன் திருப்பதி சென்ற அமைச்சர் விநோத்… சர்ச்சைக்குள்ளான அமைச்சரின் செயல்
தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, வேளாண் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டின் வரைவு ஆவணத்தை எடுத்துக்கொண்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட் ஆவணத்தை கோயிலில் வைத்து பூஜை செய்து, மாநிலத்தின் விவசாயிகள் நலன், மழை, அதிக விளைச்சல் மற்றும் வேளாண் வளர்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசின் வரலாற்றில், வேளாண் பட்ஜெட் ஆவணத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்திய சம்பவம் இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசுகள் பட்ஜெட் தாக்கலுக்கு முன் அதிகாரப்பூர்வ ஆவணங்களை கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபடும் நடைமுறையைப் பின்பற்றவில்லை. அந்த நிலையில், தற்போதைய அமைச்சர் இப்படியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒருபுறம், இது அமைச்சரின் தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். மறுபுறம், அரசின் அதிகாரப்பூர்வ பட்ஜெட் ஆவணத்தை மத வழிபாட்டுடன் இணைப்பது, மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அரசின் நிலைப்பாட்டுடன் பொருந்துகிறதா? என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள், பாசன மேம்பாடு, இயற்கை வேளாண்மை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற சாகுபடி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)