ஒரே க்ளிக்கில் கடன், அதே வேகத்தில் பறிபோகும் உயிர்… என்னதான் தீர்வு?

Apr 24, 2026 - 09:02
 0
ஒரே க்ளிக்கில் கடன், அதே வேகத்தில் பறிபோகும் உயிர்… என்னதான் தீர்வு?

கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், வெறும் ரூ.13,500 கடன்தான் அவர் உயிரைப் பறித்திருக்கிறது என்ற உண்மை வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

டிஜிட்டல் கடன் செயலியில் வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த முடியாத அந்த இளைஞருக்கு, கடன் கொடுத்த நிறுவனம் 96 முறை போன் கால் செய்ததோடு, அவர் படிக்கும் கல்லூரிக்கும் 26 முறை போன் செய்திருக்கிறது. இதனால் அவமானத்துக்கும் மன உளைச்சலுக்கும் ஆளான அவர், தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கந்துவட்டி காலத்திலிருந்தே கடனால் தற்கொலை செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தவே நாடு முழுவதும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. கடன் வழங்குவதிலும் கடனை வசூலிப்பதி லும் விதிகள் வகுக்கப்பட்டன. ஆனாலும், கடன் தற்கொலைகள் நின்றபாடில்லை.

கடனின் கோர முகம் இப்போது டிஜிட்டலிலும் மிரட்டிக்கொண்டிருக்கிறது. கடன் செயலிகள் என்ற பெயரில் யாரோ, எங்கிருந்தோ நடத்தும் ஃபின்டெக் நிறுவனங்கள், ஒரே க்ளிக்கில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் உடனடிக் கடன் வழங்கும் வலையை விரித்து வருகின்றன. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் ஆசைகளும், போட்டி மனப்பான்மையும் அதிகமாக இருப்பதால், மக்கள் அந்த வலையில் எளிதில் விழுந்துவிடுகிறார்கள். குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு உடனடி பணத் தேவைகள் அதிகம். அவர்களது ஆடம்பரப் போக்கை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, கொள்ளை வட்டி, அபராதம் என வசூலித்துக் கொழிக்கின்றன பல நிறுவனங்கள். வாங்கிய கடனுக்கும் அதிகமான வட்டி என அவர்களைச் சுரண்டிய பின்னும், கடனைச் செலுத்தவில்லை என நிகழ்த்தப்படும் மிரட்டல்களும், கடன் வசூலிப்பு அணுகுமுறைகளும் எல்லை மீறுகின்றன. கடன் வாங்கியவர்களின் குடும்பம், நண்பர்கள், வசிப்பிடம், பணியிடம் வரை இவர்களின் அத்துமீறல்கள் நீள்கின்றன. இதனால், தொடர்ச்சியாகத் தற்கொலை மரணங்கள் செய்திகளாகின்றன.

இதற்குக் கடிவாளம் போட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எந்த நடவடிக்கை யும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. புதிது புதிதாக முளைக்கும் கடன் செயலிகள் எங்கிருந்து, யாரால் இயக்கப்படுகின்றன என்பதையெல்லாம் ஆராய வேண்டிய பொறுப்பு அவற்றுக்கு உள்ளது.

வருமான ஆதாரம் உள்ள, கடனைத் திரும்பச் செலுத்தும் திறனுள்ள நபர் களுக்கே கடன் செயலிகள் கடன்களை வழங்க வேண்டும். கடன் வசூலிப்பு விதிகள் வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை, தண்டனை வழங்கப்பட வேண்டும். மக்களுக்கு கடன் வலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கடன் விவகாரங்கள் குறித்த புகார்களை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும்.

இளைஞர்களைக் காக்கத் தவறினால், சமூகமாக நாம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டிவரும்.

- ஆசிரியர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0