கெஜ்ரிவால் வழக்கு: `நீதிபதியின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாதா?' - பெண் நீதிபதி காட்டம்

Apr 21, 2026 - 13:32
 0
கெஜ்ரிவால் வழக்கு: `நீதிபதியின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாதா?' - பெண் நீதிபதி காட்டம்

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு பெண் நீதிபதி ஸ்வர்னா சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் இவ்வழக்கில் இருந்து நீதிபதி ஸ்வர்னா விலக வேண்டும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், `நீதிபதியின் மகன்கள் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவின் உதவியோடு பணிகள் பெற்றுள்ளனர்' என்றும், `நீதிபதி ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதாவும்' குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு நீதிபதி ஸ்வர்னா முன்பு விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதி, `தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது விசாரணையில் உள்ள வழக்குக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், தனது குடும்ப உறவினர்கள் எவரும் தனது நீதிமன்றத்தின் முன் ஆஜராகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் “ஒரு அரசியல்வாதியின் மனைவி அரசியல்வாதியாக முடியுமென்றால், ஒரு அரசியல்வாதியின் பிள்ளைகள் அரசியல்வாதிகளாக முடியுமென்றால், ஒரு நீதிபதியின் பிள்ளைகள் சட்டத் துறையில் நுழைய முடியாது என்று எப்படிக் கூற முடியும்? இது நீதிபதிகள் குடும்பத்தின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்குச் சமமாகும்.

ஒரு நீதிபதியின் குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்கிறார்கள் என்பதை, வழக்குத் தொடுப்பவர் எவரும் கேள்விக்குள்ளாக்க முடியாது. ஒரு நீதிபதியின் பிள்ளைகளோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ தங்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று, வழக்குத் தொடுப்பவர் எவரும் கட்டளையிட முடியாது. நான் அரசியலமைப்பு சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துள்ளேன். . நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து நீதி வளைந்து கொடுப்பதில்லை என்பதை எனது உறுதிமொழி எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.

எந்தவொரு அரசியல் நிர்ப்பந்தத்திற்கும் நீதி ஒருபோதும் அடிபணிவதில்லை. எவ்விதப் பாரபட்சமுமின்றி, அச்சமின்றி நான் முடிவெடுப்பேன். வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிப்பேன். இந்த வழக்கிலிருந்து நான் விலகமாட்டேன். ஒரு நீதிபதி நடுநிலைமையுடன் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது; நீதிபதி ஒருவர் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலக வேண்டும் என்று கோரும் வழக்குத் தரப்பினர், அந்த நீதிபதி நடுநிலைமை தவறுவதை நிரூபிக்க வேண்டும்.

வழக்கு தொடுப்பவர் நீதித்துறையையே விசாரணை முன்பு நிறுத்தியுள்ளார். இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான பாதையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்'' என்று குறிப்பிட்டார்.

நீதிபதி ஸ்வர்னா ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததை கெஜ்ரிவால் சுட்டிக்காட்டி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நீதிபதி ஸ்வர்னா, “அந்த நிகழ்ச்சிகள் புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் மகளிர் தின நிகழ்வுகள் குறித்த நிகழ்ச்சிகளாகவோ, அல்லது இளம் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுவதற்கான நிகழ்வுகளாகவோ இருந்தன. பல நீதிபதிகள் அந்நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர். இத்தகைய பங்கேற்பை, ஏதேனும் ஒரு சித்தாந்தச் சார்பாக குறிப்பிட இயலாது.

இவ்வழக்கில் இருந்து நான் விலக வேண்டும் என்ற இந்த மனுவானது ஒரு "Catch-22" (சிக்கலான இருதலைக்கொள்ளி) சூழலை உருவாக்கி இருக்கிறது. இவ்வழக்கில், நான் விலகினாலும் சரி அல்லது விலகாவிட்டாலும் சரி எந்நிலையிலும் கேள்விகள் எழும் வகையிலான ஒரு சூழலில் நான் நிறுத்தப்பட்டுள்ளேன். மனுதாரர் (கேஜ்ரிவால்) தனக்குச் சாதகமான, 'எப்படிப் பார்த்தாலும் தனக்கே வெற்றி' எனும் ஒரு சூழலை உருவாக்கிக்கொள்வார்.

இவ்வழக்கிலிருந்து நான் விலகிக்கொண்டால், எவ்வித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு அது முக்கியத்துவம் அளிப்பதாக அமையும். விசாரணையிலிருந்து விலகிக்கொள்ளும் அந்த எளிதான பாதையானது, அமைதியாக இதிலிருந்து வெளியேறுவதாகும். அதேவேளையில், ஊடகங்கள் பொறுப்புணர்வு ஏதுமின்றி அவதூறு பரப்பும்" அவர் கவலை தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0