கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி - மோசடி புகாரில் சிக்கிய பின்னணி!

Jun 10, 2026 - 16:02
0
கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி - மோசடி புகாரில் சிக்கிய பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டம், சிராயன்விளையைச் சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ்ராஜ் (31). ஐவுளிக்கடை உரிமையாளரான கிரேட் பிரின்ஸ்ராஜ் காதல் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவியின் பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்துவருகிறது. அந்த பிரச்னையை முடித்துவைத்து, சொத்தை பெற்றுத் தருவதாக, கிரேட் பிரின்ஸ்ராஜிடம் அவரது உறவினரான கிருஷ்ணவேணி என்பவர் கூறியுள்ளார். மேலும், தனது கணவர் நாகசுமன் வழக்கறிஞர் என பொய்யாகக் கூறிய கிருஷ்ணவேணி, சொத்தை மீட்பதற்காக கிரேட் பிரின்ஸ்ராஜிடம் ஆறு லட்சம் ரூபாய்  பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கிரேட் பிரின்ஸ்ராஜின் காரையும் கிருஷ்ணவேணி ஏமாற்றி வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், சொத்து பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்தாமல் இருந்துள்ளார் கிருஷ்ணவேணி. ஒருகட்டத்தில் சந்தேகம் அடைந்த கிரேட் பிரின்ஸ்ராஜ், அவர்கள் குறித்து விசாரித்துள்ளார். அதில், கிருஷ்ணவேணியின் கணவர் நாகசுமன் வழக்கறிஞர் இல்லை என்பதும் தன்னிடம் பொய் கூறி மோசடியில் ஈடுபட்டு இருப்பதையும் அறிந்துள்ளார். எனவே, பணத்தையும், காரையும் திருப்பித் தருமாறு கிரேட் பிரின்ஸ்ராஜ் கேட்டுள்ளார். கிருஷ்ணவேணி பணம், கார் ஆகியவற்றை திருப்பிக் கொடுக்கவில்லை. கிரேட் பிரின்ஸ்ராஜ் இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த நிலையில், கிருஷ்ணவேணியும் அவரது கணவர் நாகசுமனும் தலைமறைவாகிவிட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நாகசுமன்

இதற்கிடையே தோவாளை தேவர் நகர்ப் பகுதியில் உள்ள வீட்டில் கிருஷ்ணவேணியும், நாகசுமனும் தலைமறைவாக வசித்துவருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் தலைமையில் போலீஸார் அங்கு சென்றனர். அப்போது வீட்டை உட்பக்கமாக பூட்டிவிட்டு இருந்த அவர்கள், வெளியே வர மறுத்துள்ளனர். வீட்டில் இருந்தபடியே கிருஷ்ணவேணியும், நாகசுமனும் போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த நாயை ஏவி விட்டு உதவி ஆய்வாளர் அனுஜனை கடிக்க வைத்துள்ளனர். அனுஜனின் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் நாய் கடித்துள்ளது.

நாய் கடித்ததால் காயம் அடைந்த உதவி ஆய்வாளர்

நாய்க்கடியால் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் அனுஜன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதே சமயம், வீட்டில் பதுங்கி இருந்த நாகசுமன்- கிருஷ்ணவேணி தம்பதியரை ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸார் கைதுசெய்தனர். ஏற்கெனவே அவர்கள்மீது மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளரை நாயை ஏவி விட்டு கடிக்க வைத்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இப்போது இரண்டு வழக்குகளின் கீழ் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User