தேமுதிக-வுக்கு எவ்வளவு ஓட்டு? விஜய்யின் தாக்கம் என்ன? - நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி!

Mar 19, 2026 - 17:02
 0
தேமுதிக-வுக்கு எவ்வளவு ஓட்டு? விஜய்யின் தாக்கம் என்ன? - நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி!

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார். இந்நிலையில், கொங்கு மண்டலத்துக்கு நடந்த இன்றைய நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் தேமுதிக மற்றும் மநீமவின் செல்வாக்கு குறித்து கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார்.

வேட்பாளர் நேர்காணல்
வேட்பாளர் நேர்காணல்

அறிவாலயத்தில் நேற்றிலிருந்து தமிழக தொகுதிகளுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. இன்று கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களுக்கான வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்திருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கரூருக்கான நேர்காணலில் கலந்துகொண்டார்.

கறார் காட்டிய முதல்வர்

கடந்த முறை கொங்கு மண்டலத்தில் திமுக பலத்த அடி வாங்கியிருந்தது. அதனால் நேர்காணலில், இந்த முறை உள்ளடி வேலைகள் எதுவுமின்றி நிர்வாகிகள் ஒன்றிணைந்து யாரை வேட்பாளராக அறிவிக்கிறோமோ அவருக்காக வேலை செய்ய வேண்டுமென முதல்வர் கறாராக கூறியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கென உள்ளே வரும் விண்ணப்பத்தாரர்களிடம் தொகுதி நிலவரம் குறித்தும் முதல்வர் கேட்டு தெரிந்துகொள்கிறார்.

வேட்பாளர் நேர்காணல்
வேட்பாளர் நேர்காணல்

அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் தொகுதிகளுக்காக நேர்காணலுக்கு சென்றவர்களிடம், 'தொகுதியில் தேமுதிக, மநீமவுக்கு எவ்வளவு வாக்குகள் இருக்கும்?' என குறிப்பாக கேட்டிருக்கிறார்.

இரண்டு கட்சிக்கும் தலா 2000-3000 வாக்குகள் வரை இருக்குமென உடன்பிறப்புகள் தெரியப்படுத்தியிருக்கின்றன. அதேமாதிரி, கொங்கு மண்டலத்தில் விஜய்யின் தவெக கொஞ்சம் வலுவாக இருப்பதாகவும், விஜய் பிரிக்கப் போகும் வாக்குகளும் நமக்கு சாதகமாகவே அமையும் என்றும் சில நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். அதையும் முதல்வர் உன்னிப்பாக கேட்டிருக்கிறார்.

அதேமாதிரி, கொங்கு மண்டலத்தில் கடந்த முறை கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை சேர்ந்தவர்களிடம், 'இந்த முறையும் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கலாமா உங்க கருத்து என்ன?' என முதல்வர் கேட்டிருக்கிறார். உடன்பிறப்புகள் அத்தனை பேரும் ஒருமித்த குரலில் 'வேண்டவே...வேண்டாம்' எனக் கூறியிருக்கின்றனர். 'கூட்டணி கட்சிகளிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். பேசிவிட்டு சொல்கிறோம்!' என முதல்வர் கூறியிருக்கிறார்.

பிரேமலதா
எல்.கே.சுதீஷ், பிரேமலதா, ஸ்டாலின்

காலை 9:30 - 10:00 மணிக்குள் அறிவாலயத்தின் கலைஞர் அரங்கம் வந்து சேரும் முதல்வர் 2:15 வரைக்கும் நேர்காணல் நடத்துகிறார். அதன்பிறகு சித்தரஞ்சன் சாலை வீட்டிற்கு சென்று மதிய உணவை முடித்துவிட்டு சிறிய ஓய்வோடு மீண்டும் 4:30 மணிக்கு அறிவாலயம் வந்து 7 மணி வரைக்கும் மீண்டும் நேர்காணல் நடத்துகிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0