"என்னை சினிமா பிரபலமாக மட்டும் பார்க்கவேண்டாம்"- அரசியலில் இறங்கிய அஞ்சலி நாயர் சொல்வது என்ன?

Mar 23, 2026 - 08:03
 0
"என்னை சினிமா பிரபலமாக மட்டும் பார்க்கவேண்டாம்"- அரசியலில் இறங்கிய அஞ்சலி நாயர் சொல்வது என்ன?

கேரள மாநில சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி தினமாகும். இதற்கிடையே வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ட்வெண்டி 20 கட்சி சார்பில் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை தொகுதியில் சினிமா நடிகை அஞ்சலி நாயர் வேட்பாளராக களத்தில் உள்ளார். திருப்பூணித்துறை நகராட்சி பா.ஜ.க வசம் உள்ளது. பா.ஜ.க-வுக்கு செல்வாக்கு உள்ள திருப்பூணித்துறை சட்டசபை தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்திருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தயக்கத்துடனே பா.ஜ.க நிர்வாகிகள் தேர்தல் பணி செய்துவருகின்றனர். ட்வெண்டி 20 வேட்பாளர் நடிகை அஞ்சலி நாயர் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்து வருகின்றார்.

தேர்தல் பிரசாரத்தில் நடிகை அஞ்சலி நாயர்

அரசியல் அனுபவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சலி நாயர், "தேர்தலில் எனக்காக பணிசெய்யும் நிர்வாகிகள்தான் எனக்கு பக்கபலமாக உள்ளனர். மக்களின் ஆதரவு எனக்கு உற்சாகம் அளிக்கிறது. என்னை சினிமா பிரபலமாக மட்டும் நான் நினைக்கவில்லை. கடந்த 18 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன் ஆனால், இப்போதும் நான் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைகளுக்கும், சந்தைகளுக்கும் சாதாரண நபர்களைப் போன்று சென்று வருவேன். 'நீ சினிமா பிரபலம் என்பதால் சாதாரணமாக இப்படி போகாதே' என என் கணவரும், பிள்ளைகளும் அடிக்கடி கூறுவார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் நான் சாதாரண மக்களைப் போன்றுதான் இருப்பேன்.

நடிகை அஞ்சலி நாயர்

என்னை திருப்பூணித்துறையின் மகளாகவும், அவர்களின் வீட்டில் ஒருவராக மக்கள் கருதவேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். நான் சினிமா பிரபலம் அல்ல. சினிமா என்பது எனது வேலை என்ற வகையில் மட்டும் பார்த்தால் போதும். திருப்பூணித்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு கிடைத்த வாய்ப்பை இறைவன் தந்த ஆசியாக கருதி நான் ஏற்றுக்கொண்டேன்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0