தி.மலை: பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் அட்டூழியம்; பணம் பறிப்பு - 8 பேர் கும்பல் சிக்கிய பின்னணி

Jun 03, 2026 - 10:32
0
தி.மலை: பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் அட்டூழியம்; பணம் பறிப்பு - 8 பேர் கும்பல் சிக்கிய பின்னணி

வைகாசி மாத பௌர்ணமி கடந்த 30-ம் தேதி தொடங்கி, மறுநாள் மதியம் நிறைவடைந்தது. 30-ம் தேதி இரவு, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண், தன் நண்பர்களுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் செங்கம் வழியாக தருமபுரி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். பெரியகோளாப்பாடி கிராமத்திலுள்ள பாறை அருகே சென்றபோது, வண்டியை நிறுத்திவிட்டு நண்பருடன் அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாகவந்த மர்மநபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, காட்டுக்குள் அழைத்துச் சென்று, அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கின்றனர்.

மேலும், அந்த பெண்ணின் ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினையும் பறித்துக்கொண்டு துரத்தியடித்திருக்கின்றனர். அந்தப் பெண் வீடு சென்று சேர்ந்ததும், 31-ம் தேதி மர்மநபர்கள் அவரை போன் மூலம் தொடர்புகொண்டு `ஒரு லட்சம் ரூபாய் வேண்டும். தரலைனா, உன்னோட நிர்வாண படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம்’ என மிரட்டியிருக்கின்றனர்.

பாலியல் தொந்தரவு (சித்தரிக்கப்பட்ட படம்)

இதையடுத்து, நான்காயிரம் ரூபாயை அந்த பெண் `கூகுள் பே’ மூலமாக அனுப்பிய நிலையிலும், மீதத் தொகையைக் கேட்டு அந்த கும்பல் மிரட்டியிருக்கிறது. இதனால், வேறு வழித் தெரியாமல் காவல்துறையின் அவசர உதவி அழைப்பு எண் `100’-ஐ தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்ததை தெரியப்படுத்தி பாதுகாப்பு கேட்டிருக்கிறார். இதையடுத்து, திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீஸார், அந்த பெண்ணை பாதுகாப்புடன் வரவழைத்து புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதேபோல, 31-ம் தேதி இரவு திருவண்ணாமலை மாநகராட்சிக்குஉட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், பியூட்டி பார்லரில் தனது பணியை முடித்துவிட்டு இரவில் கிரிவலம் சென்றிருக்கிறார். கிரிவலப் பாதை அடி அண்ணாமலை அருகே வந்தபோது, நடக்க முடியாததால், நண்பருக்கு போன் செய்து, தன்னை அழைத்துச் சென்று வீட்டில் விடும்படி கேட்டிருக்கிறார். அதன்பேரில், அவரின் நண்பர் கிரிவலப் பாதைக்கு வந்து இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள ஹோட்டலிலும் சாப்பாடு வாங்கிக்கொண்டு, அய்யம்பாளையம் பைபாஸ் பகுதியோரமாகச் சென்று சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்குவந்த மர்மகும்பல், அவர்களை மிரட்டி காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று தாக்கியதாகவும், இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல்ரீதியதாக தொந்தரவு செய்து, அவர் காதில் அணிந்திருந்த இரண்டு கிராம் தங்க கம்மலையும் பறித்துக்கொண்டதாகத் தெரிகிறது.

``மறுநாள் `கூகுள் பே’ மூலமாக பணம் அனுப்ப வேண்டும்’’ என மிரட்டி அனுப்பியதாகவும் கூறப்படும் நிலையில், வீட்டுக்குச் சென்ற இளம்பெண் தனது தந்தையிடம் அழுதபடி நடந்ததை கூறியிருக்கிறார். அவர் உடனடியாக, திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அடுத்தடுத்து பெறப்பட்ட ஒரே மாதிரியான இந்த இரண்டு வழக்குகளால் காவல்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். டி.எஸ்.பி ராஜன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மர்மநபர்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட கும்பல்

அதன்படி, திருவண்ணாமலை இளம்பெண் விவகாரத்தில் ஆடையூரைச் சேர்ந்த வாசு என்கிற வாசுதேவன், பெரிய பாலியப்பட்டைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் தமிழ் என்கிற தமிழரசன், அஸ்வநாதசுரணையைச் சேர்ந்த அப்பு, லேலே என்கிற ஹரிகரன், சர்மா, சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார், திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சிவகணேசன் என்கிற சூர்யா ஆகிய எட்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். அதேபோல, தருமபுரி பெண் விவகாரத்திலும் வாசுதேவன் தலைமையிலான இந்த கும்பலே ஈடுபட்டது தெரியவந்தது.

வாசுதேவன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி எனக் கூறப்படுகிறது.

முக்கிய குற்றவாளியான வாசுதேவன் உள்ளிட்ட எட்டு பேரை போலீஸார் தேடிப்பிடித்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர். இவர்களிடமிருந்து ஆறு செல்போன்கள், மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். அந்த செல்போன்களில் பதிவான காட்சிகளை விசாரணைக்குஉட்படுத்தி வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவங்கள், திருவண்ணாமலையை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User