கோவை தெற்கு: "23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை மக்கள் கிழிப்பார்கள்" - அண்ணாமலை காட்டம்
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதி நாள் வாக்கு சேகரிப்பு வாகனப் பேரணி சிவசக்தி காலனி பகுதியில் துவங்கியது.
இப்பேரணியை பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். மேலும் ஒரே இருசக்கர வாகனத்தில் வானதி சீனிவாசன் உடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வானதி சீனிவாசன், “கடந்த முறை போலவே கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கோவையில் இரண்டு நாள்களாக கரூர் ரவுடி கும்பல் வாயிலாக காவல் துறையை மிரட்டுவது, காவல் நிலையத்திலேயே ரகளை செய்வது, எதிர்க்கட்சியினரைத் தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளார்கள்.
கோவையைக் கொள்ளை அடிப்பதற்காக ஸ்டாலினால் அனுப்பப்பட்ட செந்தில் பாலாஜி ஆட்கள் அதனை அரங்கேற்றி வருகிறார்கள். கோவை மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள்.
தி.மு.க-வினர் ஒரு சில தொகுதிகளில் 2,500 ரூபாயும் செந்தில் பாலாஜி போட்டியிடும் தெற்கு தொகுதியில் 5,000 ரூபாயும் வாக்காளர்களுக்குக் கொடுக்கிறார்கள். அந்தப் பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது? டாஸ்மாக்கில் கொள்ளையடித்த ஆயிரம் கோடி ரூபாய் பணம், மணல் மாஃபியா மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்.
கோவையைக் கெடுப்பதற்காகவே திட்டமிட்டு கோவையைப் பழிவாங்குவதற்காகவே, முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அனுப்பி இந்த வித்தையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். கோவை மக்கள் ஸ்டாலினுக்கும், தி.மு.க-விற்கும் பாடம் புகட்டுவார்கள்.
போதைப் பொருளால் ஆதாயம் அடைந்து அந்தப் பணத்தைக் கொண்டு எதிர்காலச் சந்ததியைத் தொலைத்து கொண்டிருக்கிறார்கள். எனவே மக்கள் தெளிவாக வாக்களிக்க வேண்டும்” என்றார்.
பின்னர் பேசிய அண்ணாமலை, “கோவையில் தி.மு.க-வினரால் ராமநாதபுரம் காவல் நிலையத்தைப் பூட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அராஜக அரசியலை வன்முறை அரசியலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மக்கள் எப்போதும் வாக்கு பெட்டியில்தான் பேசுவார்கள், அதனை ஏப்ரல் 23ஆம் தேதி பேச போகிறார்கள்.
செந்தில் பாலாஜி எப்போதுதான், அவரது தவறை ஏற்றுக் கொண்டுள்ளார்? நாளை மறுநாள் வரை காந்தியவாதி மாதிரி செந்தில் பாலாஜி பேசுவார். 23ஆம் தேதி மக்கள் அவருடைய முகத்திரையைக் கிழிப்பார்கள்.
தேர்தல் ஆணையம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இன்னும் அதிக ஆட்களைக் கொண்டு அவர்களது பணியைச் செய்ய வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள். வெளி மாவட்டத்தினரை வெளியேற்ற வேண்டும். வேட்புமனுத் தாக்கல் செய்தபோதே, வானதி சீனிவாசன் வெற்றி உறுதியாகிவிட்டது.
கோவை வடக்கு தொகுதியிலும் 5,000 ரூபாய் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும், அது இந்தத் தேர்தலைப் பாதிக்காது என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0