Chiranjeevi: "சூர்யா, கல்விக்காக செய்பவை எனக்கு ஊக்கமளிக்கின்றன!" - புதிய முயற்சியில் சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி தற்போது 'விஸ்வம்பரா' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார். 
இந்நிலையில் அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கும் புதிய முயற்சியைத் தொடங்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் செயல்களால் ஈர்க்கப்பட்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளார் என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பலரின் கல்விக் கனவுகளை நனவாக்கி வருகிறது. சூர்யா தனது சமூகப் பணிக்கு சிரஞ்சீவியை முன்மாதிரியாகக் கொண்டதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற உகாதி கொண்டாட்ட விழாவில் சிரஞ்சீவி, சூர்யா கல்விக்காக செய்யும் உதவிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, “சூர்யா, ஏழைகளின் கல்விக்காக செய்யும் விஷயங்கள் எனக்கு ஊக்கமளிக்கின்றன. அவரைப் போலவே சமூகப் பணியை மேற்கொள்ள விரும்புகிறேன்” எனப் பேசியிருக்கிறார். 
பொருளாதார சிரமம் காரணமாக திறமையான குழந்தைகள் கல்வி வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய திட்டத்தின் நோக்கம் எனவும் இந்த முயற்சி ஒரு பகுதிக்கு மட்டுமல்லாமல் செயல்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
விரிவான திட்ட அமைப்பு தயாராகி வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் சிரஞ்சீவி ஏற்கனவே அவருடைய அறக்கட்டளை மூலம் இரத்த வங்கி, கண் வங்கி உள்ளிட்ட பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0