'எங்களுக்காக கோர்ட்ல கேஸ் நடத்துனதே முதல்வர் விஜய்தான்!' - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு மக்கள்

May 16, 2026 - 15:32
0
'எங்களுக்காக கோர்ட்ல கேஸ் நடத்துனதே முதல்வர் விஜய்தான்!' - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு மக்கள்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. முதல்வர் ஆவதற்கு முன்பு பிரசாரத்தின் போது தனது முதல் மக்கள் சந்திப்பை விஜய் ஏகனாபுரத்திலேயே நடத்தியிருந்தார். அப்படியிருக்க, விஜய் முதல்வர் ஆகியிருக்கும் நிலையில் பரந்தூர் மக்கள் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

பரந்தூர்
பரந்தூர்

இதுதொடர்பாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலாளர் கதிரேசனிடம் பேசினோம். அவர் கூறுகையில், 'முதல்வர் விஜய் மக்களை சந்திக்கும் அரசியல் பயணத்தையே எங்கள் ஊரில்தான் தொடங்கியிருந்தார். அப்போது, 'விமான நிலையம் வேணாம்னு சொல்லல, விளைநிலங்கள் நிறைஞ்சிருக்க இந்த பரந்தூர், ஏகனாபுரத்துலதான் வேணாம்னு சொல்றேன்.

தவெக ஆட்சி அமைந்த உடனே இந்தத் திட்டம் கைவிடப்படும்' எனப் பேசியிருந்தார். தவெக தலைவராக விஜய் வந்து எங்கள் ஊரில் பேசிய பிறகுதான் பரந்தூர் விமான நிலைய விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது. ஊருக்கு வந்து ஒரு பேச்சுக்கு ஆதரவு கொடுத்தோம் என்று மட்டுமில்லாமல், ராகவாச்சாரி என்கிற சீனியர் வக்கீலை நியமித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடவும் முழு உதவியையும் செய்தார். வழக்கு சம்பந்தமாக நாங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. மக்கள் அவர் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால்தான் எங்களின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக தவெகவுக்கு துணையாக நின்று பிரசாரமும் செய்தோம்.

Vijay
Vijay

பரந்தூர், ஏகனாபுரம் மக்களின் வாக்கெல்லாமே விசில் சின்னத்திற்குதான் விழுந்திருக்கிறது. சமீபத்தில் தவெகவின் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களை சந்தித்தோம். 'நீங்க 4 வருசமா அலைஞ்சிட்டீங்க. இனியும் அலைஞ்சி திரிஞ்சு கஷ்டப்படாதீங்க. உங்க போராட்டம் வெற்றியடையப் போற நாள் வந்துருச்சு. இது உங்க அரசாங்கம். உங்க விருப்பத்துக்கு மாறா எதுவும் நடக்காது' என நம்பிக்கை கூறினார். முதல்வர் மீது நாங்கள் பெரிய மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கிறோம். இந்தத் விமான நிலைய திட்டத்தை முழுமையாக கைவிடும் அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என நம்புகிறோம். அவர் வென்றிருப்பதை கொண்டாடும் விதமாக. எங்களின் காவல் தெய்வங்களாக நிற்கும் எல்லையம்மன் மற்றும் கொல்லமேட்டாளம்மன் கோவிலின் ஆடி மாதத்தில் முதல்வருக்கென சிறப்பு பூஜை செய்யவிருக்கிறோம்' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User