எரியும் மேற்கு ஆசியா; தத்தளிக்கும் MSME-கள்: 'Tax Holiday நிச்சயம் தேவை'- எம்.எல்.ஏ எழிலன் கோரிக்கை!

Mar 13, 2026 - 16:01
 0
எரியும் மேற்கு ஆசியா; தத்தளிக்கும் MSME-கள்: 'Tax Holiday நிச்சயம் தேவை'- எம்.எல்.ஏ எழிலன் கோரிக்கை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்தியாவின் MSME (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்) துறை உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க 'வரி விடுமுறை' (Tax Holiday) அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் டாக்டர் எழிலன் எழுப்பியிருக்கிறார். குறிப்பிட்ட காலத்திற்கு வரி விலக்கு அளிப்பதன் மூலம் நிறுவனங்களின் பணப்புழக்கம் அதிகரிக்கும்; லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதே நேரம், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்ற விமர்சனமும் இருக்கிறது. இது குறித்து எம்.எல்.ஏ டாக்டர் எழிலனை தொடர்கொண்டு விரிவாகப் பேசினோம்.

சென்னை மவுண்ட் ரோடு பெட்ரோல் பங்குகள்
சென்னை மவுண்ட் ரோடு பெட்ரோல் பங்குகள்

அவர், ``இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை 90% இறக்குமதியையே சார்ந்துள்ளது. 2014-க்குப் பிறகு 'ஆத்மநிர்பார் பாரத்' போன்ற திட்டங்கள் பேசப்பட்டாலும், எரிசக்தி தற்சார்பில் இன்னும் பெரிய முன்னேற்றம் இல்லை. தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் சப்ளை செயின் பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு நேரடியாகப் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை விட, இந்தியாவின் உண்மையான பொருளாதார முதுகெலும்பாக இருப்பது MSME துறைதான். ஒரு நிறுவனத்திற்கு 40 முதல் 100 ஊழியர்கள் வரை வேலை வாய்ப்பு வழங்கி, பல குடும்பங்களைப் பாதுகாப்பவர்கள் இவர்களே. வரி கட்டுவதிலும் இவர்கள் நேர்மையாகச் செயல்படுகிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அறிமுகம் மற்றும் கொரோனா பெருந்தொற்று என அடுத்தடுத்து மூன்று பெரிய அடிகளைத் தாங்கியும் இத்துறை இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இப்போது எரிசக்தி நெருக்கடி மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இத்துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், மத்திய அரசு அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு "வரி விடுமுறை" (Tax Holiday) அறிவிக்க வேண்டும். அதாவது, இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வரியை வசூலிக்காமல் இருந்தால், அந்தப் பணத்தைக் கொண்டு இத்துறை தங்களைச் சமாளித்துக் கொள்ளும்.

குறு, சிறு நிறுவனம்

வரி விடுமுறை அளித்தால் "வருவாய் இழப்பு" ஏற்படும் என்று அரசு கூறலாம். ஆனால், முட்டையிடும் கோழியை (MSME) ஒழுங்காகப் பார்த்துக் கொண்டால்தான் தொடர்ந்து முட்டை கிடைக்கும். இத்துறை அழிந்துவிட்டால் வருவாய்க்கே வழியில்லாமல் போய்விடும். ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வரிச் சலுகை (Corporate Tax Cut) அளிக்கப்பட்டும், அதனால் தனியார் முதலீடு பெரிதாக அதிகரிக்கவில்லை; மாறாகப் பணவீக்கம்தான் அதிகரித்தது.

ரா மெட்டீரியல் கொண்டு வருவதற்கும், உற்பத்தியான பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் எரிபொருள் மிக அவசியம். எரிசக்தி விலை உயர்வு இந்த இரண்டு முனைகளிலும் MSME-களைத் தாக்குகிறது. எனவே, உலக நாடுகள் இக்கட்டான காலங்களில் தங்கள் சிறு தொழில்களைப் பாதுகாப்பது போல, இந்திய அரசும் வரிச் சலுகை வழங்கி இத்துறையைப் பாதுகாக்க வேண்டும்.

எனவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை தருவதை விட, நாட்டின் உண்மையான பொருளாதாரப் பங்களிப்பாளர்களான MSME-களுக்கு இந்த இக்கட்டான 3 மாத காலத்தில் வரிச் சலுகை வழங்குவதே சிறந்தது" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0