ஆம்ஸ்ட்ராங்: "என் கணவரின் கொடூரக் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்"- திரு.வி.க நகர் வேட்பாளர் பொற்கொடி

Mar 29, 2026 - 10:31
 0
ஆம்ஸ்ட்ராங்: "என் கணவரின் கொடூரக் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்"- திரு.வி.க நகர் வேட்பாளர் பொற்கொடி

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்த நிலையில், இறுதிக் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டார்.

அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு திரு.வி.க நகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தத் தொகுதியின் வேட்பாளராக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியுமான பொற்கொடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து பொற்கொடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஆம்ஸ்ட்ராங் மற்றும் திருமதி ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் மற்றும் திருமதி ஆம்ஸ்ட்ராங்

அப்போது, ``தமிழக மாநில பகுஜன் சமாஜ் கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைந்துள்ளது. இக்கூட்டணியில் எங்களுக்கு 'திரு.வி.க நகர்' தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் நாங்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, என் கணவரின் படுகொலைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சட்டமன்றத்திலும் இது குறித்துப் பேசியுள்ளார்.

அதேபோல், என்.டி.ஏ கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களும் என் கணவருக்காகத் தொடர்ந்து நீதி கேட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெறும். முதல் முறையாக நான் தேர்தலில் போட்டியிடுவது எனக்கு மிகவும் முக்கியமானது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல. என் கணவரின் கொடூரக் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கான ஒரு போராட்டமாகவும் பார்க்கிறேன்.

திரு.வி.க நகர் தொகுதியைப் பொறுத்தவரை, அங்கு எங்களுக்குப் பெரும் செல்வாக்கு உள்ளது. மக்களின் ஆதரவோடும் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0