எஸ்.பி.வேலுமணியை வரவேற்க செல்லாத அதிமுக முக்கிய நிர்வாகிகள் – காரணம் என்ன?

May 28, 2026 - 19:02
0
எஸ்.பி.வேலுமணியை வரவேற்க செல்லாத அதிமுக முக்கிய நிர்வாகிகள் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வகித்து வந்த அ.தி.மு.க. கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் 4 பேர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிமானா செய்த நிலையில், மீண்டும் ஒரே அணியாக இணைந்தனர். இந்த பிரச்னைகள் காரணமாக சென்னையில் முகாமிட்டு இருந்த எஸ்.பி. வேலுமணி பல நாள்களுக்கு பிறகு இன்று கோவை திரும்பினார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அணிகள் பிரிந்திருந்த போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த செ.ம.வேலுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி தவிர்த்து பல முக்கிய நிர்வாகிகள் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

எஸ்.பி. வேலுமணிக்கு வரவேற்பு
எஸ்.பி. வேலுமணிக்கு வரவேற்பு

குறிப்பாக கோவை மாநகர மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார், சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவிநாசி சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு எஸ்.பி. வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியிலும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாநகர மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணனிடம் கேட்டபோது, “சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால், வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. வேறு எந்த பிரச்னையும் இல்லை. அவரும் கட்சியில் இணைந்து விட்டாரே?” என்றார். பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்கவில்லை.

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

இது குறித்து அ.தி.மு.க-வினரிடம் விசாரித்தபோது, “கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார் கலந்து கொள்ளவில்லை. எஸ்.பி. வேலுமணி மீண்டும் ஒரே அணியாக செயல்படுவோம் என இணைந்தாலும், அவரது கட்சி பதவி மீண்டும் வழங்கப்படவில்லை. சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் எடுக்கப்போகும் முடிவுகளும், எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடும் என்ன என தெரியாமல் உள்ளது. தற்போதைய சூழலில் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக இருப்பது, தங்களது கட்சி பதவிகளுக்கு சிக்கல் வருமோ என்ற அச்சம் நிர்வாகிகளிடம் இருக்கிறது. நிலைமை சரியாகும் வரை அமைதியாக இருப்போம் என்ற மனநிலையில் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்” என்றனர்.

இதற்கு பதிலளித்த எஸ்.பி. வேலுமணி, “எல்லோரும் கூட தான் இருக்கிறார்கள். சென்னை வந்து பார்த்தார்கள். வெளியூரில் இருப்பதால் சிலர் வரவில்லை. எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User