தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

Sep 12, 2026 - 17:30
0
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர்.

100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். எதிர்க்கட்சிகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டதால், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

3,000-க்கும்  மேற்பட்ட  பக்கங்கள் உடைய  முழு விசாரணை அறிக்கை, கடந்த 18.05.2022-ம் தேதி அப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

கலவரம்

அதில், 'யாருடைய  உத்தரவும், தூண்டுதலுமின்றி  துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தமிழ்நாடு இதுவரையிலும் கண்டிராத மிக மோசமான காவல்துறை நடைவடிக்கை. அப்போது பொறுப்பு வகித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  வெங்கடேஷ், தூத்துக்குடி எஸ்.பி.மகேந்திரன், தென்மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார்  சரட்கார், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 17 பேர்தான்  இதற்கு  முழுப் பொறுப்பு.

இவர்கள் மீது சட்டப்பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்' எனக் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் தவறுகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 19.10.22-ல்  சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முந்தைய தி.மு.க அரசு எந்தவொரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர், போராளிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “கொலையாளிகள் மீது தாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி ஒப்புக்கொண்டதோடு, 'முடிந்தால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள்' என ஆளுங்கட்சிக்குச் சவால் விட்ட உதயநிதியின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒப்படைப்பு
ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒப்படைப்பு

இந்தச் சவாலிலிருந்து கடந்த கால அ.தி.மு.க., தி.மு.க அரசுகளின் துரோகமும், அதிகார வர்க்கத்தின் மீதான அவர்களின் பாசமும் பட்டவர்த்தனமாகியுள்ளன. தூத்துக்குடி மக்களின் நாசகார  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் என்பது, ஒருநாள் உணர்ச்சி வேகத்தில் உருவானதல்ல. பல ஆண்டுகளாகக் காற்றில் கலந்த நச்சுவாயுவாலும், நிலத்தடி நீரைக் கெடுத்த ரசாயனக் கழிவுகளாலும் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு மக்கள் பலியானதன் விளைவாக வெடித்தெழுந்த உயிர்வாழ்வதற்கான மக்களின் தன்னெழுச்சி அறப்போராட்டம்.

இப்படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், மிகத் தெளிவான ஆதாரங்களுடன் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. காவல்துறை தற்காப்புக்காகச் சுடவில்லை என்றும், குறிபார்த்துச் சுடும் கொடிய ஆயுதங்களைப்  பயன்படுத்திப் போராட்டக்காரர்களின் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும் ஆணையம் அம்பலப்படுத்தியது.

கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் - வைகைச் செல்வன் - கிருஷ்ணமூர்த்தி
கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் - வைகைச் செல்வன் - கிருஷ்ணமூர்த்தி

இந்தப் படுகொலைக்குக் காரணமான  17 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 4 வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மட்டுமின்றி, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் ஆணையம் திட்டவட்டமாகப் பரிந்துரைத்தது. கடந்த அ.தி.மு.க அரசுதான் காரணம் என்றால், அக்கொலையாளிகளைக் காப்பாற்றியது தி.மு.க  அரசு என்பதை அவர்களே சட்டமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளனர்.

கடந்த தி.மு.க ஆட்சியில், ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகும், கொலைக் குற்றவாளிகளைச் சிறையிலடைக்காமல், பெயரளவில் இடமாற்றம் செய்தும், சிலருக்குத் தொடர்ந்து பதவி உயர்வு வழங்கியும் கொலையாளிகள் பாதுகாக்கப்பட்டதை நாடும் மக்களும் நன்கு அறிவர்.

தமிழகத்தை ஆளும் தற்போதைய த.வெ.க அரசு, கடந்த கால அரசுகள் செய்த அதே வரலாற்றுப் பிழையைச் செய்துவிடக் கூடாது. உயிரிழந்தவர்களின் குருதியில் விளைந்த நியாயமான நீதியை நிலைநாட்ட வேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது.

ஆணைய அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை

அவர்கள் மீது கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்து, துரிதமாகக் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களைச் சிறையிலடைக்க வேண்டும்” என்றார். 

இதுகுறித்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க செய்தித் தொடர்பாளருமான முனைவர். கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “அந்தச் சம்பவம் நடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நடந்த அ.தி.மு.க ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அந்த அரசு காப்பாற்றியது. தி.மு.க அரசு வழக்கு தொடர்ந்த பிறகே கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு நீதியரசர் அருணா ஜெகதீசனின் அறிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் 4 காவல்துறை உயர் அதிகாரிகள், 2 காவல் ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருந்தண்டனை குற்றப்பிரிவின் கீழ் ஒரு உதவி ஆய்வாளர், இரு இரண்டாம் நிலைக்காவலர்கள், ஒரு முதல் நிலைக் காவலர் மற்றும் ஒரு காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர் மீது குற்றவழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கலவரம்

மூன்று முதல் நிலைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர, 38 வழக்குகள் திரும்பப் பெற்றுள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்தில் 9 போலீஸாருக்குத் தக்க தண்டனை பெற்று கொடுத்ததே தி.மு.க ஆட்சியில்தான். அதனால், தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியது தவறு. என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவர் தெரிந்து பேச வேண்டும்” என்றார்.

முன்னாள் அமைச்சரும் த.வெ.க-வின் செய்தித் தொடர்பாளருமான முனைவர். வைகைச் செல்வனைத் தொடர்பு கொண்டுப் பேசினோம். “தளபதி விஜய் அவர்கள் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியவர்.

போராட்டம்

ஆணையத்தின் பரிந்துகளை இந்த அரசு ஏற்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.

நீதி மறுக்கப்படுவது அநீதிக்குத் துணை போவதாகும். தூத்துக்குடி மக்களின் நீண்ட காலக் காயத்திற்கு நீதித்துறை மற்றும் தமிழ் நாடு அரசின் நேர்மையான நடவடிக்கையே மருந்தாக அமையும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User