கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

Sep 11, 2026 - 23:00
0
கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இவானா என்ற ஒரு வயதுடைய பெண் குழந்தை இருந்தது. ​

நேற்று அபிஜித் வழக்கம்போல் பணிக்குச் சென்றிருந்தார். மாலை சுமார் 3:30 மணியளவில் வீட்டில் கிறிஸ்டி, குழந்தை இவானா மற்றும் அபிஜித்தின் உறவினர்களான நேசம்மா, ஜெசிந்தா ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது கிறிஸ்டியின் நடவடிக்கையில் அசாதாரணமான மாற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்த உறவினர்கள், அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். ​

அங்கு குழந்தை இவானா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அவர்கள் அலறினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக குழந்தையை மீட்டு மலையின்கீழ் தாலுகா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனாலும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.

கணவர் அபிஜித் மற்றும் குழந்தையுடன் கிறிஸ்டி
கணவர் அபிஜித் மற்றும் குழந்தையுடன் கிறிஸ்டி

குழந்தையை பெற்ற தாயே கொலைசெய்த ​சம்பவம் தொடர்பாக மலையின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கணவன் - மனைவி இடையே நிலவி வந்த தொடர் குடும்பப் பிரச்னையே இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. ​

மேலும், தங்களின் 4-வது திருமண நாளான நேற்று குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக கிறிஸ்டி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்கொலை செய்துகொள்வதற்காக அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக அவர் தெரிவித்ததையடுத்து, போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப்பின் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட கிறிஸ்டி
கைதுசெய்யப்பட்ட கிறிஸ்டி

கணவன் தன்னை தனிமைப்படுத்தியதாகவும். கணவனின் வீட்டில் ஏற்பட்ட தனிமையே கொலைக்குக் காரணம் என்று கிறிஸ்டி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், கணவரின் குடும்பத்தினர் தன்னைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்ததாகவும், தனது சொந்த வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவில்லை என்றும், தனக்கு விருப்பமான உணவைச் சமைக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

தான் இறந்துவிட்டால் குழந்தை தனிமையாகிவிடும் என்று கருதியே, குழந்தையை முதலில் கொன்றுவிட்டு பிறகு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக கிறிஸ்டி வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User