'நாம ஏன் இறங்கிப் போகணும்' - அதிமுக-வுக்கு செக்... பாமக முடிவின் பின்னணி என்ன?

Sep 19, 2026 - 14:02
0
'நாம ஏன் இறங்கிப் போகணும்' - அதிமுக-வுக்கு செக்... பாமக முடிவின் பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அதிரடியாக அறிவித்திருக்கிறார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். அ.தி.மு.கவுக்கு எப்படியும் பா.ம.க ஆதரவளித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். அவரின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க ஆட்சியமைத்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசைக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இரண்டு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில், தாராபுரம், மதுராந்தகம் என 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ஆறாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனை போட்டி உருவாகியிருக்கிறது. இந்தநிலையில், மதுராந்தகம் தொகுதியில் செல்வாக்குமிக்க பா.ம.கவின் ஆதரவு யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த தேர்தலைப் போல அ.தி.மு.கவுக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்திருக்கிறது பா.ம.க. இதன் பின்னணி குறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம்..,

``அ.தி.மு.கவினரின் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் அலட்சியப் போக்கே இதற்கு முழுமுதற் காரணம். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே, உட்கட்சிப் பிரச்னையைக் காரணம் காட்டி எங்களுக்கான தொகுதிகளைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல், நாங்கள் கேட்ட தொகுதிகளையும் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, பல தொகுதிகளில் எங்கள் வாக்குகள் அ.தி.மு.க வேட்பாளர்களுக்குச் சென்ற அளவு அவர்களின் வாக்குகள் எங்களுக்கு வரவில்லை. தர்மபுரியில் எங்களால் அவர்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். ஆனால், பென்னகரத்தில் கூட அவர்களின் வாக்குகள் எங்களுக்கு வரவில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் அப்படித்தான், போளூர் அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஆரணியில் போட்டியிட்ட ஜெயசுதாவுக்காக வேலை பார்த்தார்கள். எங்கள் வேட்பாளரைக் கைவிட்டார்கள். அதை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ள்வில்லை. அதுமட்டுமல்ல, 2016,21 தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள் எவ்வளவு, 2026 தேர்தலில் திலகபாமா வெறும் 8500 வாக்குகள் வாங்கினார்.

அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் எங்கே போனது. ஜெயலலிதா கட்சித் தலைமையாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா, எடப்பாடி பழனிசாமி ஆளுமையில்லாத தலைவராக இருப்பதால்தான் நிர்வாகிகள் அலட்சியமாக இருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், இப்போது நடக்கின்ற இடைத்தேர்தல் யாருக்கு வாழ்வா, சாவா போராட்டம் எங்களுக்கா, அ.தி.மு.கவுக்கா?..,அவர்களுக்குத்தான் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. ஆனால், முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தாமல் ஏனோதானோவென நடந்துகொள்கிறார்கள்.

அன்புமணி, எடப்பாடி பழனிசாமி

காரணம், எடப்பாடி பழனிசாமி தாராபுரத்தில் வெற்றிபெற்றால் போதும் என நினைக்கிறார். மதுராந்தகத்தை அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அவர் இறங்கிவந்து எங்களிடம் ஆதரவு கேட்கவும் தயாராக இல்லை.நாங்களாக ஆதரவு தெரிவிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார். நாங்கள் ஏன் இறங்கிப்போக வேண்டும். பொருளாதார ரீதியான விஷயங்கள்தான் காரணம் என ஒருசிலர் விமர்சிக்கிறார்கள். 2026 தேர்தலில் அவர் எங்களுக்கு சரியான அளவில் கைகொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இந்தத் தேர்தலில் எங்களுக்கு அப்படியொரு தேவை இல்லை. தங்கள் கட்சி நிர்வாகிகளைக்கூட அனுசரித்துச் செல்ல மறுப்பவர், ஆளுமை இல்லாத ஒருவருடன் கூட்டணி வைப்பதால் பா.ம.கவுக்கு அரசியல் ரீதியாக என்ன லாபம் என்கிற கண்ணோட்டத்திலும் எங்களின் எதிர்காலத்தைக் கணக்கில்கொண்டும்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள்.

அ.தி.மு.க வட்டாரத்தில் பேசும்போது,

``எங்களோடுதான் கூட்டணியில் இருந்தார்கள். தற்போது அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, த.வெ.கவுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கவே இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்கள்'' என்பதோடு முடித்துக்கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User