`எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல' - பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

Apr 22, 2026 - 10:32
 0
`எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல' - பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரானில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் (ஏப்ரல் 22) ஓராண்டு நிறைவடைகிறது.

26 ஆண்களின் உயிரைப் பறித்த இந்தத் தாக்குதல், கடந்த பல பத்தாண்டுகளில் காஷ்மீர் கண்ட மிக மோசமான வன்முறையாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே நாளில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம் அது. பஹல்காமின் ‘மினி-சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரான் புல்வெளியில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குழுமியிருந்தனர்.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்

7 அடி உயர சங்கிலி வேலிகளால் சூழப்பட்ட அந்தப் பகுதிக்கு இரண்டு வாயில்கள் மட்டுமே இருந்தன. அப்போது காடுகளுக்குள் இருந்து தானியங்கித் துப்பாக்கிகளுடன் வெளிப்பட்ட மூன்று பயங்கரவாதிகள், வெளியேறும் வாயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கினர்.

பாதுகாப்புப் பணியாளர்கள் எவரும் இல்லாத அந்த நேரத்தில், பயங்கரவாதிகள் ஆண்களைத் தனியாகப் பிரித்து சுட்டுக் கொன்றனர்.

உலுக்கிய அடையாளப் படம்

திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில், தன் கணவரான கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலின் உடலுக்கு அருகில் அழுதுகொண்டிருந்த ஹிமான்ஷி நர்வாலின் புகைப்படம் தேசத்தையே உலுக்கியது.

துயரத்தின் உச்சத்திலும், "காஷ்மீரிகளையோ அல்லது முஸ்லிம்களையோ மக்கள் குறிவைக்க வேண்டாம். எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல" என்று அவர் கூறியது அமைதியின் குரலாக ஒலித்தது.

இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல்

இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தைபாவின் பதிலி அமைப்பான 'ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றது. இதற்குப் பதிலடியாக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டது.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். எல்லையை இந்தியா மூடியது. பதிலுக்கு பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது.

தாக்குதலுக்குப் பிறகு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் எல்லையோர பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் தாக்கியது. அதைத் தொடர்ந்து, தப்பியோடிய மூன்று பயங்கரவாதிகளைத் தேடும்பணி தொடங்கப்பட்டது.

சுமார் 300 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியில், ட்ரோன்கள் மற்றும் அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் மூலம் 93 நாட்கள் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இறுதியில், கடந்த 2025 ஜூலை 28 அன்று, இந்திய இராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் தச்சிகாம் அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்த அந்த மூன்று பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.

இந்தத் துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும் காஷ்மீரில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``கடந்த ஆண்டு இதே நாளில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் அநியாயமாகப் பறிபோன அப்பாவி உயிர்களை நினைவு கூர்கிறேன். அவர்கள் என்றும் மறக்கப்பட மாட்டார்கள்.

மோடி
மோடி

இந்த ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கிக் கொள்ள முயற்சிக்கும் அந்தத் துயரமுற்ற குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தேசமாக, நாம் இந்தத் துயரத்தில் ஒன்றுபட்டு, உறுதியுடன் நிற்கிறோம்.

இந்தியா எந்தவொரு பயங்கரவாதத்திற்கும் ஒருபோதும் தலைவணங்காது. பயங்கரவாதிகளின் இழிவான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0