”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” - ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?

Mar 23, 2026 - 19:02
 0
”வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார்” - ஒரத்தநாடு தொகுதி நேர்காணலில் ஸ்டாலின் சொன்னது என்ன?

அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தார். பின்னர் அவர், திமுக-வில் சேர்ந்த பிறகு அவருடைய சொந்த தொகுதியான ஒரத்தநாடு கவனம் பெற்றது.

வைத்திலிங்கம் கட்சியில் சேர்வதற்கு ஏதேனும் டிமாண்டும் வைக்கப்பட்டதா என்று அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்படி எதுவும் வைக்கவில்லை என்றார். ஆனாலும் ஒரத்தநாடு தொகுதி வைத்திலிங்கத்திற்கு உறுதி செய்யப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.

தொகுதிக்குள் பம்பரமாகச் சுழன்றவர், வேட்பாளர் அறிவிப்பு வருவதற்கு முன்பே 90 சதவீத தேர்தல் பணிகளை முடித்து விட்டார் என்கிறார்கள்.

சென்னை  அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரத்தநாடு நேர்காணல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரத்தநாடு நேர்காணல்

இந்தச் சூழலில் இன்று தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு திமுக-வில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. தொகுதி வாரியாக விருப்பமனு அளித்தவர்களை ஒன்றாக அமரவைத்து, வேட்பாளர் ரேஸில் இருப்பவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் சிலவற்றைக் கேட்டார்.

இதே போல் ஒரத்தநாடு தொகுதிக்கான நேர்காணல் நடந்தது. இதில் விருப்பமனு அளித்திருந்த வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 40 பேர் கலந்து கொண்டனர்.

நேர்காணலில் நடந்தவை குறித்து விபரம் அறிந்த சிலரிடம் பேசினோம். "முதல்வர் ஸ்டாலின், முதலில் தொகுதியில் தேமுதிகவிற்கு எவ்வளவு வாக்குகள் இருக்கிறது எனப் பொதுவாகக் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். வைத்திலிங்கம் நம்முடன் சேர்ந்திருக்கிறார். அவர் கடந்த தேர்தலில் 38,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எனக் குறிப்பிட்டு பேசியவர், இப்போது தொகுதி எப்படி இருக்கிறதுனு வைத்திலிங்கத்திடம் இருந்து தொடங்கினார்.

உடனே வைத்தி, நான் கட்சியில் சேர்ந்த பிறகு எல்லா ஊருக்கும் சென்றேன் மக்கள் உங்கள் மீது நல்ல மதிப்பு வைத்துள்ளனர். நாம்தான் ஜெயிக்குறோம் என்றாராம்.

வைத்திலிங்கம், எம்.இராமச்சந்திரன்
வைத்திலிங்கம், எம்.இராமச்சந்திரன்

இதையடுத்து கடந்த 2016 தேர்தலில் வைத்திலிங்கத்தைத் தோற்கடித்த எம்.இராமச்சந்திரனிடம் கேட்க, தம்பி நீங்க எடுக்குற முடிவு சரியாத்தான் இருக்கும், என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே, யார் போட்டியிட்டாலும் வெற்றி என்கிற நிலையில் தொகுதி உள்ளது என்றுள்ளார்.

இதையடுத்து கலைமணி இளையபாரதியிடம் கேட்க, கடந்த முறை திமுக ஏன் தோற்றது என இங்குள்ள அனைவருக்கும் தெரியும். தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், நீங்க அப்பாவா, அண்ணனா, வீட்டில் ஒருத்தரா வாழ்றீங்க. வைத்திலிங்கம் வந்த பிறகு நமக்கு தொகுதியில் கூடுதல் பலமாகியிருக்கிறது. நாம்தான் ஜெயிக்குறோம் என்றாராம்.

வைத்திலிங்கம் வருகையால் வாய்ப்பு நழுவிய அதிருப்தியில் இருக்கும் மகேஷ் கிருஷ்ணசாமி நேர்காணலுக்குப் பிறகு டல்லாகக் காணப்பட்டாராம். எனக்கு சப்போர்ட் செய்து பேசியிருக்காலாமேனு சிலரிடத்தில் உரிமையுடன் கடிந்து கொண்டாராம். நேர்காணலில் முதல்வர் பேசியது அங்கு நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றைப் பார்த்தால் ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்கு நூறு சதவீதம் உறுதியாகி இருப்பது தெரிகிறது. அவரும் படு உற்சாகமாகக் காணப்படுகிறார் என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0