USA : ``குவைத் தவறுதலாக 3 அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டது" - அமெரிக்கா!

Mar 2, 2026 - 21:02
 0
USA : ``குவைத் தவறுதலாக 3 அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டது" - அமெரிக்கா!

இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி உள்ளிட்ட உயர் அதிகார்கள் உயிரிழந்தனர். அதற்குப் பழிவாங்கும் வகையில், ஈரான், குவைத், சவூதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், குவைத் வான் பாதுகாப்புப் பகுதியில் பறந்த மூன்று போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த மூன்று விமானங்களும் ஈரானுடையது எனக் கருதப்பட்ட நிலையில், அது அமெரிக்காவின் போர் விமானம் என்றத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆறு விமானிகளும் பத்திரமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, குவைத்தின் வான் பாதுகாப்புப் படை இந்த விமானங்களை தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானங்கள் சுடப்பட்ட தருணத்தில், விமானிகள் பாராசூட் மூலம் குதிக்கும் காட்சிகளும், தரையிறங்கிய விமானிகளை குவைத் அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் மீட்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மீட்கப்பட்ட ஆறு விமானிகளும் தற்போது சீரான உடல் நிலையில் இருப்பதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில், நட்பு நாடான குவைத்தின் தாக்குதலுக்குள்ளானது அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0