அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை' - அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; ட்ரம்ப் அதிருப்தி

Jul 01, 2026 - 13:01
0
அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை' - அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; ட்ரம்ப் அதிருப்தி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் கையெழுத்திட்ட முதன்மை கோப்புகளில் ஒன்று ``அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கக் கூடாது" என்ற நிர்வாக உத்தரவு.

அதிபர் ட்ரம்பின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முழுமையான விசாரணைக்குப் பிறகு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி நாள் அமர்வில், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் எழுதிய தீர்ப்பில், ``அமெரிக்காவில் சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக தங்கியிருக்கும் பெற்றோரின் பிள்ளைகள், அமெரிக்காவின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள் ஆவர்.

அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்

எனவே, அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின் குடியுரிமை பிரிவின் கீழ், அவர்கள் பிறப்பாலேயே அமெரிக்க குடிமக்கள் ஆகிறார்கள். குடியுரிமை என்பது உரிமைகளைப் பெறுவதற்கும், நமது அரசியல் சமூகத்தில் சுதந்திரமாகப் பங்கேற்பதற்குமான ஒரு அடிப்படை உரிமை. 14-வது அரசியலமைப்புத் திருத்தத்தை உருவாக்கியவர்கள், இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு சுதந்திரமான நபருக்கும் இந்த வாக்குறுதியை அளித்துள்ளனர். அந்த வாக்குறுதியை இன்று நாம் நிலைநாட்டுகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``குடியுரிமை பெறுவதற்காக வெளிநாட்டினர் மேற்கொள்ளும் 'பிறப்பு சுற்றுலா' போன்ற சட்டவிரோத திட்டங்களைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் உள்ள அரசு வழக்கறிஞர்களுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். குடியுரிமை ஓட்டைகளைப் பயன்படுத்தித் தங்களது குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை பெற முயற்சிப்பவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்," என்றும் எச்சரித்திருக்கிறது.

மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர, அமெரிக்காவில் பிறக்கும் எவரும் குடிமகனே என்று அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், இக்கொள்கையை மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தையே திருத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், ட்ரம்ப் இதற்கு நாடாளுமன்றச் சட்டமே போதும் என்று கூறி வருகிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தத் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் ட்ரூத் பக்கத்தில், ``உச்ச நீதிமன்றம் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமையை உறுதி செய்துள்ளது. இது நம் நாட்டிற்கு மிகவும் மோசமானது. ஆனால், அதிபரின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவதன் மூலம் இதை நாம் எளிதாக ஈடுகட்ட முடியும். இதற்கு நீண்ட மற்றும் சிக்கலான அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் தேவையில்லை! நாட்டின் பணத்தை வீணடிக்கும், அநீதியான இந்த பிறப்பு குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணிகளை நாடாளுமன்றம் இன்றே தொடங்க வேண்டும். அவர்களுக்கு எனது முழுமையான ஆதரவு இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User