TVK: ’அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினாரா?’ - சர்ச்சையில் MLA கனிமொழி சந்தோஷ்

May 19, 2026 - 13:32
0
TVK: ’அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினாரா?’ - சர்ச்சையில் MLA கனிமொழி சந்தோஷ்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில் கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ”கவுண்டம்பாளையம் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளைச் சந்தித்து, தொகுதியில் பொதுச் சுகாதார சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுவது, தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்படுவது, கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவது, நோய் தடுப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவது மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுகாதார வசதிகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவது குறித்து விரிவாகக் கலந்துரையாடினேன்.

மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, தேவையான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்களுக்கு வலியுறுத்தினேன்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கனிமொழி சந்தோஷ்
கனிமொழி சந்தோஷ்

இந்தப் பதிவால் அரசு அதிகாரிகளை கனிமொழி சந்தோஷ் தனது வீட்டிற்கு அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “அரசு மேல் அதிகாரிகளைத் தன் வீட்டுக்கு வர கட்டாயப்படுத்தி ஆய்வு செய்த அதிகாரம் யார் கொடுத்தது, இந்தச் சட்டமன்ற உறுப்பினருக்கு?” என முதலமைச்சர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரை ’டேக்’ செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல த.வெ.க-வினரும் கனிமொழி சந்தோஷை விமர்சித்து கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளை பிளாஸ்டிக் சேர்களில் அமர வைத்துவிட்டு, கனிமொழி சந்தோஷ் சோபாவில் அமர்ந்திருப்பது பண்ணையார்தன மனநிலை எனவும்,

களத்திற்குச் சென்று ஆய்வு செய்யாவிட்டாலும், எம்.எல்.ஏ. அலுவலகத்திலாவது அதிகாரிகளைச் சந்திப்பதுதான் முறையாக இருக்கும் எனவும் கூறும் த.வெ.க-வினர், முதலமைச்சர் விஜய்யின் பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்பட வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கனிமொழி சந்தோஷ்
கனிமொழி சந்தோஷ்

இது தொடர்பாக விளக்கம் கேட்க கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ-வைத் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் அவரது கணவர் சந்தோஷ்குமாரிடம் கேட்டபோது, “இது வீடு இல்லை, நரசிம்மநாய்க்கன்பாளையம் பகுதியில் உள்ள மேடமின் அஸ்ட்ராலஜி ஆஃபிஸ். எம்.எல்.ஏ. ஆஃபிஸ் இன்னும் ஓபன் செய்யவே இல்லை. இப்போதுதான் ரெடி பண்ணி கொண்டிருக்கிறோம். எனவே, இங்குதான் அனைவரையும் அவர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க-வினர் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அதிகாரிகள் வந்தால் அலுவலகத்திற்குள் வைத்துதான் பேச முடியும். வெளியே நிற்க வைத்து பேச முடியாது. பிளாஸ்டிக் சேர் போட்டிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். டிசண்ட்டான நல்ல சேர்களைத்தான் போட்டுள்ளோம்” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User