பூம்புகார் கடற்கரையில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு: கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

Jun 18, 2026 - 18:00
0
பூம்புகார் கடற்கரையில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு: கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கடற்கரையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும்.

இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் 'புகார் நகரமாகப்' பெரும்பங்கு வகிக்கிறது, பூம்புகார்.

பூம்புகாரில் கடற்கரை மட்டுமன்றி கண்ணகி, கோவலன், மாதவியின் வாழ்க்கை முறைகளை அறிவதற்கான கலைக்கூடமும், தொல்லியல் ஆய்வுக்கூடமும் இயங்கி வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவ்வப்போது கூடும் இடமாகவும் இது விளங்குகிறது.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீருக்குத் தவிக்கும் நிலையும், இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சற்றுத் தொலைவே செல்ல வேண்டிய சூழலும் நிலவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

திறக்கப்படாமல் இருக்கும் கழிவறை
திறக்கப்படாத கழிவறையில் உள்ள கை கழுவும் இடம்

இது குறித்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பேசியபோது, "நாங்க எல்லாருமே வெளியூர்ல இருந்து வந்திருக்கோம். இங்க பீச்ல குடும்பமா பொழுதைக் கழிக்க வந்தா... அவசரத்துக்குக்கூட ரெஸ்ட்ரூம் இல்லை. இங்கிருந்து இருநூறு - முன்னூறு மீட்டர் தள்ளி காட்டுப்பகுதி மாதிரி இருக்குற இடத்துல கட்டி வெச்சிருக்காங்க.

சின்ன வயசு ஆளுங்க ஏதோ சமாளிச்சிட்டு நடந்து போயிடுவாங்க. ஆனா வயசானவங்க எப்படி அவ்வளவு தூரம் நடந்து போக முடியும்? இங்க பீச்சுக்குப் பக்கத்துலயே ஒரு ரெஸ்ட்ரூம் இருக்கு. ஆனா, அதை மூடி வெச்சிருக்காங்க.

சரி இதுதான் இப்படி இருக்குன்னு பார்த்தா... தண்ணீர் வசதி சுத்த மோசம். நாங்களும் எடுத்துவந்த பாட்டில்கள்ல உள்ள தண்ணீர் தீர்ந்துடுச்சுன்னு, பாட்டிலைக் கையில வச்சுக்கிட்டு, இங்கச் சுத்திச் சுத்தித் தேடுறோம். ஒரு டேப் கூட இல்லை. தூரத்துல ஒரு அடிபம்பு மட்டும் தெரிஞ்சது. அங்க போய் கேட்டா... அது குடிக்குற அளவுக்கு இருக்காதுங்கிறாங்க.

ரொம்ப தூரம் நடந்து ரோட்டுக்கு வந்தாதான் வெளிக் கடைகள்ல தண்ணீர் பாட்டில் கிடைக்கும். சுற்றுச்சூழல் காரணத்தால், பீச் ஏரியாவுல கடை போட அனுமதி இல்லையாம். சரிதான்... ஆனா இங்க குப்பையைப் போடக்கூடக் குப்பைத் தொட்டிகள் பெருசா இல்லை. சரியான பராமரிப்பு இல்லாம, ரொம்ப மோசமா இருக்கு.

குப்பை கூலம்
குப்பை கூலம்

பலகோடி செலவு பண்ணி இந்தப் பூம்புகாரைப் புதுப்பிச்சிருக்கிறதா சொல்றாங்க. ஆனா, தாகத்துக்குக் குடிக்கத் தண்ணி இல்லை. கட்டுன பாத்ரூமைத் திறந்த பாடில்லை. டிரஸ் மாத்தக்கூட இடம் இல்லை... இந்த நிலையில இருந்தா டூரிஸ்ட் எப்படி வருவாங்க? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது... இப்படி வெச்சிருக்காங்க!" என்று மனம் நொந்தனர்.

இது குறித்து மயிலாடுதுறை மாவட்டச் சுற்றுலா அலுவலர் முத்துசாமியைத் தொடர்பு கொண்டு பேசினோம். "விரைவில் கழிவறைகள் திறக்கப்பட உள்ளன. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் முதலே 34 ஏக்கர் கொண்ட பூம்புகார் சுற்றுலா வளாகம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் மாற்றப்பட்டது.

கடற்கரைக்குத் தேவையான வசதிகள் குறித்துத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குப் பரிந்துரைத்துள்ளோம். இனி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திட்ட மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் விட்டு ஒவ்வொன்றாகச் செய்ய வேண்டும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User