பயன்படுத்த முடியாத நிலையில் பாரதியார் பல்கலைக்கழகப் பேருந்து நிறுத்தம்; சிரமப்படும் பயணிகள்!

Aug 05, 2026 - 15:30
0
பயன்படுத்த முடியாத நிலையில் பாரதியார் பல்கலைக்கழகப் பேருந்து நிறுத்தம்; சிரமப்படும் பயணிகள்!

கோவை – மருதமலை சாலையில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகேயுள்ள பேருந்து நிறுத்தம், போதிய பராமரிப்பின்றி காணப்படுவதால், மாணவர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதைப் பயன்படுத்தாமல் சாலையோரத்தில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக பல்கலைக்கழக நுழைவாயிலிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது பயன்பாட்டில் இல்லை.

பாரதியார் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம்

பேருந்து நிறுத்தத்தைச் சுற்றி குப்பைகள் தேங்கிக் கிடப்பதுடன், புதர்கள் மற்றும் மரக்கிளைகள் அந்தப் பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் பேருந்து நிறுத்தத்தின் உள்ளே இருந்து சாலையில் என்ன நடக்கிறது என்பதையோ, பேருந்து வருவதையோ பயணிகளால் தெளிவாகக் காண முடியவில்லை.

மேலும், பேருந்து நிறுத்தத்தில் போதுமான மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் அந்தப் பகுதி இருளில் மூழ்கிக் காணப்படுகிறது. இதனால் குறிப்பாக மாணவிகள், முதியவர்கள் மற்றும் இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது.

இதன் விளைவாக, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன்பகுதியிலேயே பயணிகள் திரண்டு நிற்கின்றனர். பேருந்துகளும் அங்கேயே பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இதனால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், சாலையைக் கடக்கும் மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

பாரதியார் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம்
பாரதியார் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம்
பாரதியார் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம்
பாரதியார் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம்
பாரதியார் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம்

எனவே, பேருந்து நிறுத்தத்தைச் சுற்றியுள்ள குப்பைகளை அகற்றுதல், புதர்கள் மற்றும் மரக்கிளைகளை வெட்டி சீரமைத்தல், போதுமான மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல், சேதமடைந்த பேருந்து நிறுத்தத்தைப் புதுப்பித்து பராமரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User