சிங்கத்தின் பிடியில் `திக்... திக்' 30 நிமிடங்கள்! - என்ன செய்து உயிர்பிழைத்தார் குஜராத் நபர்?

Jul 08, 2026 - 16:32
0
சிங்கத்தின் பிடியில் `திக்... திக்' 30 நிமிடங்கள்! - என்ன செய்து உயிர்பிழைத்தார் குஜராத் நபர்?

குஜராத்தில் உள்ள கிர் (Gir) காடுகள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசியச் சிங்கங்கள் வாழ்வது வழக்கம். ஆனால், சமீப காலமாக உணவு மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக அவை அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன. அப்படி ஊருக்குள் புகுந்த ஒரு சிங்கம், ஒரு மனிதரைத் தாக்கி அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பிடித்து வைத்திருந்த திகிலூட்டும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கத்தின் பிடியில் குஜராத் நபர்
சிங்கத்தின் பிடியில் குஜராத் நபர்

குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பலிதானா தாலுகாவுக்கு உட்பட்டது கரஜியா என்ற கிராமம். அங்கு வாழும், காலூபாய் போகாபாய் பர்மர் என்பவர் கால்நடை மேய்க்கும் பணியில் இருக்கிறார். சம்பவத்தன்று காலை, காலூபாய் தனது வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த பசுக்களுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு பெண் சிங்கம், அவரைப் பின்புறமாகப் பாய்ந்து தாக்கி தரையில் தள்ளியது. தப்பிக்க முயன்ற காலூபாயை சிங்கம் தனது முன்கால்களால் தரையோடு அழுத்திப் பிடித்துக் கொண்டது. மேலும் அவரது கையையும் தனது வாயால் கவ்விக்கொண்டது.

அவர் மீது தனது கால்களை வைத்து அழுத்தியபடி, அவரது கையை மட்டும் வாயில் கவ்விக்கொண்டு சுமார் 30 நிமிடங்கள் அங்கேயே அமர்ந்திருந்தது. சிங்கத்தின் பிடியில் சிக்கியிருந்த அந்த நபர், பதற்றத்தில் கத்தவோ, வேகமாகத் திமிறவோ இல்லை. அவர் அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், சிங்கத்தை சாந்தப்படுத்துவதற்காக அதன் தலையில் மெதுவாகத் தடவிக்கொடுக்கும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தத் தற்காப்பு உத்தியே சிங்கத்தின் ஆக்ரோஷத்தைக் குறைத்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கூடி நின்று, சத்தம் போட்டும் கற்களை வீசியும் சிங்கத்தை விரட்ட முயற்சி செய்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிங்கம் அவரை விட்டுவிட்டு சென்றது.

சிங்கத்தின் பிடியில் குஜராத் நபர்
சிங்கத்தின் பிடியில் குஜராத் நபர்

சிங்கம் விலகிச் சென்றதும், படுகாயமடைந்த காலூபாய் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிங்கத்தின் நகங்களால் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக ஆபத்தான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் நடந்தவுடன் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தும் அவர்கள் தாமதமாக வந்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் கிராமத்தில் சிங்கங்களின் நடமாட்டம் இருப்பதை பலமுறை வனத்துறையிடம் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மனித-வனவிலங்கு மோதலைத் தடுக்க நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிங்கத்தின் பிடியில் குஜராத் நபர்
சிங்கத்தின் பிடியில் குஜராத் நபர்

வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி மனிதர்கள் வாழும் பகுதிக்குள் வருவது, காடுகளில் ஏற்படும் இடப்பற்றாக்குறையையும் சூழலியல் மாற்றங்களையும் காட்டுகிறது. மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதலுக்கு அறிவியல் பூர்வமான நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User