TASMAC: `ஆன்லைனில் பேமென்ட் தான் செய்ய முடியும்; கடைகளில் தான் டெலிவரி' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Aug 06, 2026 - 18:30
0
TASMAC: `ஆன்லைனில் பேமென்ட் தான் செய்ய முடியும்; கடைகளில் தான் டெலிவரி' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ்.

அவரிடம் ஆன்லைன் மதுபான விற்பனை உள்ளிட்ட டாஸ்மாக் சம்பந்தமான பல கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்கு அவருடைய பதில்கள்...

மதுபானஆன்லைன் ஆர்டர்?

ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் தவறானவை. அது ஆன்லைன் விற்பனை கிடையாது. அது ஒரு டிஜிட்டல் பேமென்ட் முறை மட்டுமே.

டாஸ்மாக்
டாஸ்மாக்

ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ கசிந்ததால், 'ஹோம் டெலிவரி' என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் எந்தக் கடையில் என்னென்ன மதுபான வகைகள் இருப்பில் உள்ளன என்பதை மக்கள் வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளலாம். இது அரசு நிர்வாகத்திலும், கடைகளிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும்.

மதுபான விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. விலையை உயர்த்தி வருவாயைப் பெருக்குவதை விட, இந்தத் துறையில் பல ஆண்டுகளாக நடக்கும் ஊழல்களைக் கண்டறிந்து தடுத்தாலே, அரசுக்கான வருவாய் தானாகவே அதிகரிக்கும். கடந்த ஆண்டு ரூ.51,000 கோடியாக இருந்த வருவாய் இலக்கை, இந்த ஆண்டு ரூ.55,000 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

கூடுதல் 10 ரூபாய்?

இந்த 10 ரூபாய் கூடுதல் வசூல் என்பது இன்று நேற்றல்ல, 2011-ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருக்கிறது. ஊழியர்களுக்கு ஏற்படும் ஏற்றி இறக்கும் கூலி, மின்சாரக் கட்டணம், கடை வாடகை போன்ற செலவுகளுக்காக இதை வாங்குவதாகக் கூறுகிறார்கள். இப்போது அரசு அந்தச் சுமைகளை ஊழியர்கள் மீது சுமத்தாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

முக்கியமாக, ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு மற்றும் இ.எஸ்.ஐ (ESI) வசதி செய்து தரப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதன் மூலம், நுகர்வோரிடம் இருந்து கூடுதலாகப் பணம் வசூலிப்பது முழுமையாகத் தடுக்கப்படும்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

மேலும் கடைகள் மூடல்?

ஏற்கனவே 717 கடைகளை மூடியிருக்கிறோம். பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் பெண்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை ஆய்வு செய்து இடமாற்றம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் புகாருக்குள்ளாகும் கடைகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் செய்வது விற்பனையை அதிகரிப்பதற்கான வளர்ச்சி அல்ல, மாறாக இந்தத் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் மட்டுமே. மக்கள் படும் சிரமங்களை அரசு உணர்ந்துள்ளது, அவை படிப்படியாகச் சரி செய்யப்படும்."

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User