தமிழகப் பசு வதைத் தடை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Jul 13, 2026 - 13:31
0
தமிழகப் பசு வதைத் தடை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியிருந்த பசு வதைத் தடை விவகாரத்தில், தற்பொழுது உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நாட்களிலும் தமிழகத்தில் பசுக்கள் அல்லது கன்றுகளை வெட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற ஆணையை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அவசர மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த முக்கிய நிவாரணத்தை வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தடை:

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கே. சூர்யா பிரசாந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் தற்காலிகக் கொட்டகைகள் அமைத்துப் பசுக்கள் சட்டவிரோதமாக வதைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, கடந்த மே 27-ம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்படி, தமிழகத்தில் பக்ரீத் உள்ளிட்ட எந்த நாட்களிலும் பசு அல்லது கன்றுகளை வெட்டக்கூடாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் மட்டுமே விலங்குகள் வதைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், பக்ரீத் பண்டிகையின் போது பசுக்களை மட்டுமே பலியிட வேண்டும் என்பது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளில் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று அல்ல என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் மேல்முறையீடும் உச்ச நீதிமன்றத் தடையும்:

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மத உரிமைகள் மற்றும் மாநில நிர்வாக நடைமுறைகளில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதி, தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக மேல்முறையீடு செய்தது.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு வாதங்களைப் பரிசீலித்த நீதிபதிகள், பசு மற்றும் கன்றுகளை வெட்டத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு தற்பொழுது இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மூல மனுதாரரான சூர்யா பிரசாந்த், தமிழக டிஜிபி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உரிய பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவால் தமிழகத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்திருந்த சூழலில், தற்பொழுது உச்ச நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்திருப்பது தமிழக அரசுக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கியப் பொருளாதார மற்றும் நிர்வாக நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User