சிவகங்கை: காதல் திருமணத்திற்குப் பேரம் பேசிய எஸ்.எஸ்.ஐ; பணி ஓய்வு பெறவிருந்தவர் சிறையில் அடைப்பு!

Jul 10, 2026 - 15:31
0
சிவகங்கை: காதல் திருமணத்திற்குப் பேரம் பேசிய எஸ்.எஸ்.ஐ; பணி ஓய்வு பெறவிருந்தவர் சிறையில் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரண்டு லஞ்ச ஊழல் சம்பவங்கள், ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

திருப்புவனம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் சத்தியமூர்த்தி (60). அடுத்த மாதத்தில் பணிநிறைவு பெற்று, அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற இருந்த நிலையில், அவரது கடைசி காலப் பணிக்கு அவரே கறையை ஏற்படுத்தி, தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பவரது மகன், ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாகப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காதல் ஜோடியை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளார் சத்தியமூர்த்தி.

பின்னர், இப்பிரச்னையைச் சுமுகமாக முடித்து வைப்பதற்காகத் தெய்வேந்திரனிடம் 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதற்கட்டமாக, 5,000 ரூபாயை 'ஜி-பே' மூலம் தனது கணக்கிற்கு அனுப்பச் செய்துள்ளார்.

மீதமுள்ள 3,000 ரூபாயைச் செலுத்தக் கோரி சத்தியமூர்த்தி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், மனமுடைந்த தெய்வேந்திரன், லஞ்ச ஒழிப்புத்துறையினரை அணுகிப் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனப் பவுடர் தடவப்பட்ட 3,000 ரூபாய் நோட்டுகளைத் திருப்புவனத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வைத்து சத்தியமூர்த்தியிடம் தெய்வேந்திரன் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சத்தியமூர்த்தியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். அடுத்த மாதம் பணி ஓய்வு பெறவிருந்த அதிகாரி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பட்டா மாறுதலுக்குப் பணம் வாங்கிய தலையாரி

இதே போன்று திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியம் கிராம நிர்வாக அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வந்தவர் கணேசன் (56). அதே பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படைக் காவலர் ஒருவர், தனது நிலத்திற்கான பட்டா மாறுதல் கோரி கணேசனை அணுகியுள்ளார். சட்டப்படியாகச் செய்ய வேண்டிய இப்பணிக்கு, கணேசன் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த ஊர்க்காவல் படைக் காவலரும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரை நாடினார். அங்கும் திட்டமிட்டபடி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து கணேசனிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இப்படி ஒரே நாளில் ஒரே ஊரில் அடுத்தடுத்து லஞ்சப் புகாரில் அரசு ஊழியர்கள் சிக்கிய சம்பவம், சிவகங்கை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User