''டெல்லி மாணவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்" - ஆர்எஸ்எஸ் ஆதரவாளரின் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணை

Jul 28, 2026 - 09:31
0
''டெல்லி மாணவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்" - ஆர்எஸ்எஸ் ஆதரவாளரின் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணை

டெல்லி மாணவர்கள் போரட்டம் குறித்து யூ டியூப் மூலம் கேரளத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான டி.ஜி.மோகன்தாஸ் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அதில், "ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல மூன்று முறை உத்தரவிட்ட பிறகு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும்.

அதில் பலர் உயிரிழக்கவும், உறுப்புகளை இழக்கவும் நேரிடும். வெறும் நான்கு மணி நேரத்திற்குள் நிலைமையைச் சீராக்கி பிணங்களை அப்புறப்படுத்திவிடலாம்" எனப் பேசியிருந்தார்.

மற்றொரு வீடியோவில் பேசிய அவர், "டெல்லியில்​ போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து காவல்துறையை முழுமையாக விலக்கிக்கொண்டு, அதை போராட்டக்காரர்களிடமே ஒப்படைத்தால் அங்கு கொலைகளும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளும் நடக்கும்.

கடவுளின் அருளால் அதைப் பற்றி யாரும் புகார் செய்ய மாட்டார்கள். பாலியல் வன்கொடுமையை விரும்பும் பெண்கள்தான் அங்கு இருக்கிறார்கள். குறிப்பாக இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இத்தகைய விஷயங்களை விரும்புபவர்கள்" எனவும் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

சமூகத்தில் வெறுப்பையும் வன்முறையையும் தூண்ட முயன்ற டி.ஜி.மோகன்தாஸ் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, மற்றும் ஏ.ஐ.ஒய்.எஃப் ஆகிய அமைப்புகள் காவல்துறையிலும் மாநில உள்துறை அமைச்சகத்திலும் புகார் அளித்தன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், "மாற்றுக்கருத்துடையவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற சங்க பரிவார அமைப்புகளின் எண்ணமே இதுபோன்ற கொடூரமான கருத்துக்களின் மூலம் வெளிப்படுகிறது. 

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக, கேரளாவில் அமைதியான முறையில் போராடிய ஜனநாயகவாதிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அவசரம் காட்டிய கேரள காவல்துறை, போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்லுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்த டி.ஜி.மோகன்தாஸ் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யத் தயாராக இல்லை.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யும் காவல்துறை, பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுக்கும் சங்பரிவார் தலைவர்களுக்கு முன்னால் மண்டியிடுவது கேரளாவுக்குப் பெரும் அவமானமாகும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காக காவல்துறையையும் சட்ட அமைப்பையும் வேடிக்கை பார்க்க வைக்கும் மாநில காங்கிரஸ் அரசின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதற்காக டி.ஜி. மோகன்தாஸ் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அரசு முன்வர வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து டி.ஜி.மோகன்தாஸ் மீது விசாரணைக்கு உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையை சைபர் செல் ஐ.ஜி. பி.பிரகாஷ் மேற்கொள்வார் என்றும் உள்துறை அறிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User