Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" - நடன இயக்குநர் ஷெரிஃப்
'கனிமா', 'பவள மல்லி' உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர் நடன இயக்குநர் ஷெரிஃப்.
அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவிட்ட காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தக் காணொளியில் அவர், சமீபத்தில் அவருக்கு நடந்த அனுபவங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

அந்தக் காணொளியில் அவர், "நடன இயக்குநர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை வருகிறது என்று தெரியவில்லை.
சமீபத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்கம் செய்திருந்தேன். அந்தப் பாடலின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னாடியே, அதனுடைய காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு முறை, பின்னணி வடிவமைப்பு, லைட்டிங் என எல்லாவற்றையும் நானே தேர்ந்தெடுத்து ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கிக் கொடுத்தேன்.
அதை அப்படியே பாடலின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்புத் தரப்பிடம் காண்பித்து ஒப்புதல் வாங்கி, அதேபோல பிரமாண்டமான செட் அமைத்தோம்.
முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ஷாட் டிவிஷன் திட்டமிடல் முடித்து, நடன ஸ்டெப்களை உருவாக்கி அந்தப் பாடலையே முழுமையாகப் படமாக்கி முடித்தோம்.
ஆனால், அந்தப் பாடல் வெளியான பிறகுதான் எனக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரியவந்தது. அந்தப் பாடலுக்கு 'இயக்குநர்' என்று வேறொருவரின் பெயரைப் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாகவும் மனதுக்குக் கஷ்டமாகவும் இருந்தது.

இயக்குநர் அவருடைய வேலைகளைச் செய்துவிட்டு, அவரின் பெயரைப் போட்டிருந்தால் சரியாக இருக்கும். பொதுவாக, ஒரு பாடலில் ஒரு கதைக்களம் இருக்கும்போது அதற்கு நிச்சயமாக ஒரு இயக்குநர் தேவை.
நான் வெறுமனே நடன அசைவுகள் மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டுச் செல்லும் சூழலிலும் ஒரு இயக்குநர் தேவைப்படலாம்.
ஆனால், ஒரு நடனப் பாடலுக்கான எல்லாக் காட்சி அமைப்புகளையும், படப்பிடிப்புத் திட்டத்தையும் ஒரு நடன இயக்குநரே முன்னின்று செய்யும்போது, சம்பந்தமே இல்லாமல் வேறொருவர் 'இயக்குநர்' என்ற பெயரைப் போட்டுக்கொள்கிறார்கள்.
இது இன்னொருவருடைய உழைப்புக்கு அவர்களுடைய பெயரைப் போட்டுக்கொள்வது போல் உள்ளது. ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாடல் எவ்வளவு முக்கியமோ, அதுபோல அந்தக் காணொளியை உருவாக்கிய நடன இயக்குநருக்கும் அது முக்கியம்.
தயவுசெய்து எதிர்காலத்தில் இசை நிறுவனங்கள் ஒரு பாடலின் காணொளியைப் பெறும்போது, அதற்குப் பின்னால் இருக்கும் நடன இயக்குநரின் உழைப்பைப் புரிந்து கொண்டு தகுந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டும்." எனப் பகிர்ந்திருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)