தூத்துக்குடி: இடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம்; கற்பூரம் கொளுத்தி பஜனைப் பாடி வழிபட்டு வரும் ஊர் மக்கள்

Sep 12, 2026 - 21:02
0
தூத்துக்குடி: இடிக்கப்பட்ட  விநாயகர் ஆலயம்; கற்பூரம் கொளுத்தி பஜனைப் பாடி வழிபட்டு வரும் ஊர் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் ’இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சபை’யை கிறிஸ்தவ மதபோதகர் மோகன். சி.லாசரஸ் நடத்தி வருகிறார்.

குரும்பூர் ரயில் நிலையம் எதிரில் இந்தச் சபை இயங்கி வருகிறது. இந்தச் சபைக்கு அருகில் ரயிலடி அருள்மிகு ஆனந்த விநாயகர் கோயில் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்தக் கோயில், தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட நிர்வாகத்தின் எல்கைக்குள் ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மோகன். சி.லாசரஸ் தரப்பினரின் தூண்டுதலில்தான் ரயில்வே நிர்வாக அதிகாரி இவ்வழக்கைத் தொடுத்ததாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இடிக்கப்படுவதற்கு முந்தைய தோற்றம்
இடிக்கப்படுவதற்கு முந்தைய தோற்றம்

கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், “குரும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள 9.61 சதுர மீட்டர் ரயில்வே நிலத்தை உள்ளுர் மக்கள் ஆக்கிரமித்து, விநாயகர் கோயில் என்ற பெயரில் ஒரு வழிபாட்டுத் தலத்தைக் கட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியதன் அடிப்படையில் அந்த ஆக்கிரமிப்பினை அகற்றிட வேண்டும்.

ஆக்கிரமிப்பினை அகற்றிட ரயில்வேக்கு காவல்துறை பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து வழங்கிடுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்படுகிறது” என கடந்த 03.08.2026 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஏரல் தாலுகா அதிகாரிகள் மற்றும் குரும்பூர் காவல் நிலைய போலீஸார் ஆக்கிரமிப்பினை அகற்ற முயன்றனர். ஆனால், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் உள்ளுர் மக்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

வழிபாடு
வழிபாடு

இந்த நிலையில், பின்னர் 20.08.2026 அன்று அதிகாலை 3 மணி அளவில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. விநாயகர் சிலை, ஏரல் தாசில்தார் செல்வகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். விநாயகர் கோயில் அகற்றப்பட்ட விவகாரம் காட்டுத்தீயாய் பரவ ரயில் நிலையம் முன்பு ஊர் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் மற்றும் மோகன் சி.லாசரஸைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த நிலையில், குரும்பூரைச் சுற்றியுள்ள 34 கிராமங்களில் தினமும் ஒரு கிராம மக்கள், விநாயகர் சிலை இருந்த இடத்தில் மாலை அணிவித்தும், கற்பூரம் கொளுத்தியும், சிதறு தேங்காய் உடைத்தும், விநாயகர் அகவல் பாராயணத்துடன் பஜனையும் பாடி வருகின்றனர்.

வழிபாடு

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விநாயகர் பக்தர்களால் வழிபாடும் தீவிரம் அடைந்துள்ளது.

இதற்கிடையில், மத்திய  ரயில்வே துறை அமைச்சரை அணுகி, அத்துறையின் அனுமதியுடன் மீண்டும் விநாயகர் கோயில் அமைக்கும் முயற்சியில் இந்து முன்னணியினர் இறங்கியுள்ளனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User