’பாட்டிலுக்கு 10 ரூபா என பாடிய த.வெ.க, அதை கட்டுப்படுத்தி விட்டதா?’ – செந்தில் பாலாஜி கேள்வி

Jun 03, 2026 - 23:01
0
’பாட்டிலுக்கு 10 ரூபா என பாடிய த.வெ.க, அதை கட்டுப்படுத்தி விட்டதா?’ – செந்தில் பாலாஜி கேள்வி

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “திரையிலும், திரை உலகத்திலும் திரைப்படத்திலும் வசனங்கள் பேசலாம். ஆனால் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு என்ன அவசர தேவைகள் இருக்கிறதோ அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். அதுதான் முதல்வரின் கடமை. தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு தி.மு.க-வை விமர்சிப்பதை மட்டுமே குறியாக கொண்டிருக்கிறது. மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. துறையின் அமைச்சர்களும் துறையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்று செயல்படவில்லை. முதலமைச்சர் உட்பட அனைவரும் தி.மு.க மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பதில் குறியாக இருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தி.மு.க-வின் திட்டங்களை தற்போதும் மக்கள் மனதில் வைத்துள்ளார்கள். எங்களுடைய தலைவருக்கு மக்கள் ஆதரவை அளிப்பதற்கும் தயாராக உள்ளார்கள். தற்போதைய அரசு அதன் பணிகளை மறந்து வசனங்களை பேசிக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அரசு தவறு செய்கின்ற போது, அதனை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை. அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். மாற்றம் என்று கூறி மக்களை ஏமாற்றி வெற்று கவர்ச்சியில் மக்களிடம் ஓட்டுகளை வாங்கியுள்ளார்கள்.

மகளிர் பாதுகாப்பு படையை அமைப்பேன் என்று முதல்வர் கூறிய நிலையில் மூன்று முறை அதை தள்ளி போட்டு உள்ளார்கள். சூலூர் சம்பவம் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் நடவடிக்கை எடுப்பதற்கு ஆறு மாத காலம் பொறுத்திருக்க வேண்டுமா?. எங்கள் ஆட்சி மின்வெட்டு இல்லாத ஆட்சியாக இருந்தது. ஆனால் தற்போது மின்வெட்டு காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்களை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

த.வெ.க எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் விஷயத்தில் மோசமாக நிகழ்ச்சிகளில் பாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது டாஸ்மாக் விவகாரத்தில் எவற்றை கட்டுப்படுத்தி விட்டார்கள்?. டாஸ்மாக் விவகாரத்தில் தற்போதுவரை அந்த துறையின் அமைச்சர் விளக்கத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால், அன்று பாடிய பாட்டுக்கு என்ன பதில்?.

என்னை பொறுத்தவரை த.வெ.க என்பது ரீல்ஸ் ஆட்சி, இன்னும் அவர்கள் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளார்கள். மக்களுக்கான ரியல் ஆட்சியாக இன்னும் அவர்கள் பணிகளை துவக்கவில்லை, அவர்கள் பணியை துவக்குவார்கள் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் இல்லை. தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் மூலம் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார்? எவ்வளவு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட போகிறது? எத்தனை கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார். அண்ணாமலை புதிய கட்சி துவங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்த கேள்விக்கு, ”அதுபோன்ற தகவல் எனக்குத் தெரியவில்லை. அவர் அவ்வாறு ஆரம்பித்தால் அதை பற்றி பேசலாம்” என பதிலளித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User